Monday, December 31, 2012

மேய்ப்பனிடம் சிக்கிய மந்தைகள்


-மலையருவி



தனித்தனியாக
மேய்ச்சலுக்கு விடப்பட்ட
மாடுகள்
மேய்ப்பனைக் காணும்
பெருவிருப்பில்
மலையேறின.

குழலெடுத்து
மேய்ப்பன் இசைந்த
வேணுகானத்தின் நினைவில்
கடமைகள் துறந்து
கனவுகள் சுமந்து
காதங்கள் கடந்தன.

ஆலயச் சிறையிருக்கும்
மேய்ப்பனின்
அழகுத் திருவுருவை..
ஆபரணக் களஞ்சியத்தை..
காணும்
கணநேர தரிசனத்தை..
கதை கதையாய்ச் சொன்னபடி..

கோடிகளில் மிதக்கும்
மேய்ப்பனுக்குக்
காணிக்கைகள் சுமந்தபடி
கையிருப்புக்கு ஏற்ற
வரிசைகளில்
ஊர்ந்தபடி

வரிசைகளின் இடைவழியில்
மந்தைகளை அடைக்கும்
பட்டிகள்

பட்டிகள் திறக்கும்
பகவானின்
கருணைக்கு ஏங்கியபடி
இருந்து
தின்று
நாட்களைக் கழிக்க

மேய்ப்பனின்
பெருங்கருணையில்
மேய்ந்த காலங்களை
நினைவில் சுமந்தபடி
பட்டிகளில் கண்அயரும்
மந்தைகள்.

Saturday, October 20, 2012

உள்ளிறங்கும் விஷம்

 -மலையருவி


படமெடுத்தாடிப்
பாய்ந்து தீண்டிய
வார்த்தைகளிலிருந்து
உள்ளிறங்கும் விஷம்

சொற்களுக்கிடையே
தொக்கி நிற்கும்
நிறுத்தக் குறிகளும்
நிசப்தமாய்
நினைவிழக்கச் செய்யும்

மொழியற்ற
மௌனங்கள் கூட
மதியை மயக்கி
மயக்கத்தில் ஆழ்த்தும்

வார்த்தைகள் நஞ்சென்றால்
இடைவெளிகளும்
குறியீடுகளும்
மௌனங்களும் வேறென்ன!

கடிவாயில் பல்புதைத்துத்
துப்பிய வி~ம் உறிஞ்சும்
வார்த்தைகள்
இன்னும்
வார்க்கப்படவே இல்லை.

துளித்துளியாய்
உதடுகள்
கக்கிய விஷம்
தன்மானச் சூட்டில்
விரைந்து உயிர்வாங்க
உடல்பரவும்.

Tuesday, September 18, 2012

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்

-மலையருவி


மலையருவி - நா.இளங்கோ

சாலையின் விளிம்பில்
சாக்கடையோரத்தில் படுத்திருக்கும்
நாயாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
என் கவலைகள்

எப்பொழுதாவது கிடைக்கும்
எச்சில் சோறும்
எலும்புத் துண்டுமான
சில ஆறுதல் மொழிகளும்
இல்லாமல்
ஒட்டிய வயிற்றொடு
கொலைப் பட்டினியாய்..

வீசப்பட்ட
எச்சில் இலைகளுக்கும்
சொந்தம் கொண்டாடும்
அன்னக்காவடிகளாய்
வார்த்தைகள்,
இலைவழித்த கையோடு
மிரட்டும்

தொலைவில் எங்கோ கேட்கும்
சக நாய்களின்
குரைப்பொலி கேட்டுத்
திடுக்கிட்டு விழித்து
பசி மயக்கிலும்
குரலெடுத்துக் குரைத்துத்
தோழமை காட்டும்
என் கவலைகள்

Wednesday, September 12, 2012

நாளைய சாம்பல்

-மலையருவி


கோர்த்த நூலறுந்து
சிதறிய மணிகளாய்
ஆன்மாவின் நிராசைகள்
அறை முழுவதும்

எதிர்கால மரணத்தின்
ருசி பார்க்க
மொய்க்கும் ஈக்களாய்
உறவும் நட்பும்

மாலையின்
உதிர்ந்த மலரிதழ்களாய்
நிலையாமை,
வார்த்தைகளில்
கசங்கியபடி

கொடுத்த வாக்குறுதிகள்
நம்பிய எதிர்பார்ப்புகள்
பகையால் எரியும் வெறுப்புகள்
அன்பால் நனைந்த விருப்புகள்
வன்மம் குரூரம்
இரக்கம் கருணை
எல்லாம்
அந்தரத்தில் மிதக்க

குளிர்ப் பெட்டியில்
நாளைய சாம்பல்

Sunday, September 2, 2012

காக்கையின் கனவுகளில் கூடு

-மலையருவி



சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு..,

கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,

நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,

சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,

வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,

இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,

பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.

ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு

கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு

கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது

உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.

சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..

Saturday, August 25, 2012

நழுவும் காலம்

-மலையருவி


கைளிலிருந்து
நழுவும் பந்தாய்க்
காலம் உருள,
கையின் இருப்பிடம்
இறந்த காலம்

சுழலும் காற்றாய்க்
காலம் வீச,
சிக்கிய
துகள்களுக்கோ
காற்றின் பாதை
நிகழ்காலம்

வில்லிடைக் கிளம்பும்
அம்பாய்க்
காலம் கடக்க
இலக்குகள் எல்லாம்
எதிர்காலம்

புடவியின் பார்வையில்
நழுவும் காலம்
பூமிப் பந்தின்
கானல் காட்சியே

Saturday, August 18, 2012

கடவுளிடம் கேட்ட வரம்!

-மலையருவி


வீதியின் விளிம்புச் சாக்கடை
சர்வ சுதந்திரமாய்ச்
சாலையின் நடுவில்..

சகதிக் களமான
சாலையைச் செப்பனிட்டு,
சாக்கடைக்கு வழியமைத்து,
ஊருக்கு வசதி செய்ய..

கோரிக்கை மனு,
நேரடிப் புகார்,
கண்டனக் கூட்டம்,
ஆர்ப்பாட்டம்,
மறியல்,
அடையாளப் பட்டினிப்போர்
என,
தொலைக்காட்சித் தொடராய்
நீண்ட போராட்டம்

ஆளுவோருக்குக் கேட்காத
மக்களின் குரல்,
அதிசயமாய்
ஆண்டவனுக்குக் கேட்டது.

ஊர்ப்பொது மன்றில்
அவசரமாய் ஆஜரானார்
கடவுள்.

என்ன வேண்டும்?
கடவுளின் கேள்விக்கு
ஆளாளுக்கு ஒரு கோரிக்கை.

சாலை, சாக்கடை வசதி,
குடி தண்ணீர், தொடர்ச்சியாய் மின்சாரம்,
பணம், பாத்திரங்கள்
மூக்குத்தி, புடவை
அரிசி, மண்ணெண்ணெய்,
சிலருக்குச் சரக்கு..
எனப் பட்டியல்கள் நீண்டன.

மலைத்தார் கடவுள்

எல்லோருக்கும் சேர்த்;து
ஏதாவது ஒன்று..
அதுதான் முடியும்
கறாராய்க் கடவுள்

நீண்ட விவாதத்தின் முடிவில்
ஊர்கூடி
ஒன்றே ஒன்று கேட்டது

இடைத்தேர்தல்

Tuesday, August 14, 2012

விடாமல் துரத்தும் கனவு

-மலையருவி

கவிஞர் மலையருவி

சாலை விபத்தொன்றில்
கைஉடைந்து
கட்டிலில் கிடக்கையில்

ஜவ்வு மிட்டாயாய்க்
காலம் நீளுகின்ற
அவஸ்தையில்

உறக்கம் தொலைத்துப்
படுக்கையில்
உருளவும் வழியின்றி
விட்டம் பார்த்துச் சலித்த விழிகள்
மெல்ல இமைமூடும்.

பசித்திருக்கும் வேளையில்
எனது இடதுகையே
எனக்குச் சோறூட்டத்
தவிக்கையில்
திடுமென முளைத்த
மூன்றாவது கையொன்று
வாய் ஊட்டும்

தட்டுத் தடுமாறி
மலையேறிக் குதிக்கையில்
கையில் பிணைத்த
கட்டுகள் கிழித்து
சிறகுகள் முளைத்துக்
காற்றை அலைக்கும்

பகைமுகத்தில்
ஆயுதம் தொலைத்து
எதிரிகள் சூழ
மரணத்தை எதிர்நோக்கி
விழிக்கையில்
உடைந்த கையின்
மாவுக் கட்டிலிருந்து
உடைவாள் ஒன்று நீளும்

கண்மூடும் பொழுதிலெல்லாம்
திரைவிரித்துக்
கனவுகள்
காட்சிகளாய் விரியும்
காட்சிகளில்
சுகித்தும் அதிர்ந்;தும்
திரை சுருட்டுகையில்
விழிகள் மீண்டும்
விட்டம் வெறிக்கும்.

Tuesday, August 7, 2012

புத்தகக் காட்டில் என்னைத் தொலைத்தேன்..

-மலையருவி


கவிஞர் மலையருவி

பிறர் முகமறியா
புத்தகக் காட்டில்
விரல் பிடிப்பார்
யாருமின்றி
நடைப்போட்ட பொழுதுகளில்
தொலைந்து போவேன்
என அறியேன்

சொற்களும் தொடர்களும்
நெடுமரங்களாய்
நீள்கொடிகளாய்ப்
புதர்களாய்ச் செறிந்து
அந்தகாரமாய் இருண்ட
அடர் வனத்தில்
நான்
வாசிக்கும் வேட்கையில்
அலைந்து திரிகையில்
சூரியனின்
கடக மகரப் பயணங்களைக்
கணக்கிடவே இல்லை

இடையிடையே
இசைபாடும்
இலக்கியக் குயில்கள்
என்னை ஆசுவாசப்படுத்தின
கவிதைகள்
பட்டாம்பூச்சிகளாய்
மின்னிச் சிறகடித்து
மயக்கின

இசங்களுக்கு
இரையாவது அஞ்சி
நடுங்கிக் கரந்து
நோட்டமிடுகையில்
அவற்றின் ஆற்றல் கண்டு
அடங்கி ஒடுங்கினேன்

தொடரும் விண்மீன்களால்
திசையறிய
வான்நோக்கி
விழிக்கையில்
புத்தகங்கள் அன்றி
வெளி ஒன்றும் காணேன்

திக்குகள் கரைந்து
விண்ணும் மண்ணும்
என்னுள் சங்கமிக்க
நூல்களில் நுழைந்து
வாசகங்களின்
அகத்தும் புறத்தும்
அலைந்து திரிந்ததில்
என்னைத் தொலைத்தேன்.

Sunday, August 5, 2012

கோடையின் உயிர்ப்படங்கும் நேரம்

-மலையருவி


கோடையின்
உயிர்ப்படங்கும் நேரம்
சுவாசத்தின் நூலிழை
அறுந்து போவதைக்
காணக் காத்திருக்கும்
வேளையில்
பெருமூச்சாய் வெளிப்படுகின்றது
அனல்காற்று

இன்றோ நாளையோ,
உறவினர்களுக்குச்
சேதி சொல்லிவிட
தென்மேற்குத் திசைநோக்கி
விழிகளை அனுப்பி
ஆயத்தமாகையில்
வக்கனையாய் உண்ண
ஆசைப்படும்
வயோதிகமாய்ச்
சுட்டெரிக்கிறது
வெயில்

கடைசியாக ஒருமுறை
முகத்தைப் பார்க்கவும்
முடிந்தால்,
இருந்து
இழவைக் கொண்டாடவுமாக
நாற்று முடிச்சிகளோடு
காத்திருக்கின்றனர்
விவசாயிகள்
பருவமழையை எதிர்நோக்கி

தென்மேற்கும்
வடகிழக்கும்
திசைகள் மட்டுமல்ல
கோடையின் குடல் கிழித்துக்
குருதியாய்க்
குளிர்மழை அருளும்
நரசிம்மம்

Friday, July 27, 2012

இரவின் விளிம்பில்

-மலையருவி


இரவின் விளிம்பில்
உடைபடும் பனித்துளிகளில்
மென்மையாய்க் கரைகின்றன
என்
கனவுகள்

கரையும் கனவுகளிலிருந்து
கண்கள் கசக்கி
விழித்தெழுகின்றன
என்
கடந்த காலங்கள்

கடந்த காலங்களின்
இருள் துடைத்து
வெளுத்துச் சிவக்கின்றன
என்
மௌனங்கள்

மௌனங்களின்
அர்த்த அழுத்தங்களில்
உடைபட்டுக்
கண்ணாடிச் சில்லுகளாய்ச்
சிதறுகின்றது
என்
தனிமை

தனிமையின்
வெப்பச்சூட்டில் ஆவியாகி
வான்கலந்து
மழைத்துளிகளாய்
வழிகின்றன
என்
கண்ணீர்த் துளிகள்

Saturday, July 21, 2012

சித்திரங்கள் தோறும் வழிந்தோடும் குருதி ஆறு


-மலையருவி


என் வீட்டுச் சுவரில்
ஓவியங்களாய்த் தொங்குகின்றன
கடந்த காலங்கள்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடும்
குருதி ஆறுகளின்
குறுக்கே
பலி ஆட்டு மந்தைகள்
தலையைக் கவிழ்த்தபடி

தொங்கும் படங்களிலிருந்து
நீளுகின்றன
கழுமரங்களும் சூலங்களும்

உள்ளிருந்து
ஓயாமல் ஒலிக்கும்
கலவர, யுத்தப் பேரொலிகள்

யுத்தப் பின்னணிகள்,
தேசங்கள்
கண்டங்களைக் கடந்து,
பாலைவனங்களாய்,
நதிக்கரைகளாய்,
சமவெளிகளாய்,
குறுங்காடுகளாய்
திரைச்சீலைகளைப் போல்
மாறிக்கொண்டே இருக்கும்

சாந்தியும் சமாதானமும்
அன்பும் அகிம்சையும்
கருணையும் சமத்துவமும்
நிலைபெற வேண்டிக்
குரூரமாய்ச்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடுகின்றது
குருதி ஆறு.

Wednesday, July 18, 2012

முப்பாட்டன் வீடு


-மலையருவி


வீடு கைமாறிய பொழுதில்
முன்பு எப்பொழுதோ
சில பொழுதுகளில்
அந்த வீட்டின்
கதவுகள்
திறக்கப்பட்டதாய்
சில பெரியவர்கள் 
தம் பழைய நினைவுகளைத்
தூசி தட்டிக்
கதை சொன்னதுண்டு.

அது
சுவரில்
அதிஅற்புதமாகத் தீட்டப்பட்ட
ஒரு கதவு ஓவியமாக இருக்கலாம்
என்றும் நாங்கள் நம்பியதுண்டு

எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு
இடையில் பல கைமாறி
இப்போது,
சுதந்திரம் என்ற பெயரில்
எங்களுக்கு,
என்றான சந்தோஷத்தில்
கதவைப் பற்றியோ
வீட்டைத் திறப்பதைப் பற்றியோ
நாங்கள் யோசிக்கவில்லை

கொண்டாட்டங்கள் எல்லாம்
வீட்டைச் சுற்றியே இருந்தன
வீட்டின் அழகும்
மூதாதையர் பெருமையுமே
எங்கள் பேச்சாயிருந்தது.

முப்பாட்டன் வீட்டில்
கடந்த காலங்களில்
பலரும் சுருட்டியது போக
மீதமுள்ள பொக்கிஷங்கள்
மிதமிஞ்சிக் கிடந்தன

வீட்டுக்குள் நுழைய
எங்களைத் தவிர
பலருக்கும்
பலவழிகள் தெரிந்திருந்தன
உடைந்த ஜன்னல்கள் வழியாக,
தோட்டத்துச் சுவர்ஏறிக் குதித்து,
சிதைந்த மேற்கூரையின்
ஓடுகளைப் பிரித்து..
இவை போதாவென்று
உள்ளேயே
பல பழம்பெருச்சாளிகள்

காலக்கிரமத்தில்
கஜானாவும் காலியாச்சு
பொக்கிஷங்களும் கொள்ளை போச்சு

சாவி எங்கள் கைகளில்
பத்திரம் எங்கள் பெயர்களில்

ஒருமுறைகூட நாங்கள்
உள்நுழைந்ததில்லை
உள்நிறை வளங்களைக்
கண்டதேயில்லை

சமத்துவக் கதவின்
சாவி இருந்தும்
கதவைத் தேட முயன்றதுமில்லை
இருக்கும் கதவைக் காணவுமில்லை

கதவையும் திறக்காமல்
களவையும் அறியாமல்
கண்முன்னே
எம் முப்பாட்டன் வீடு
கணந்தொறும் சிதைய,
கதவு திறக்கும்
கணங்களுக்கான
விழிப்பைத் தேடுகின்றன
விழிகள் விரக்திகளோடு..

Sunday, July 15, 2012

நிஜங்கள் நிராகரிக்கப்படும் போது


-மலையருவி



நிஜம்
பலவண்ண மலர்களாய்ப்
பூத்துக்குலுங்கும்
நந்தவனத்தில்
வேர்களின் வாசம் நுகரக்
கூரிய நகங்களோடு
கரங்கள்
ஆழமாய் மண் பறிக்கும்

நிஜம்
மனம் லயிக்கும் இசையாய்க்
செவிக் கோப்பைகளில்
வழியக் காத்திருக்கையில்
அந்தகார இருட்டில்
மௌனத்தை மொழிபெயர்க்க
விரல்கள்
வேகவேகமாய்
அகராதிகளைப் புரட்டும்

நிஜம்
மேனி சிலிர்க்கத் தீண்டி
மெய்தொட்டுப் பயிலுகின்ற
தென்றலாய் வருகையில்
கைகள் இறுக்கி
கால்கள் மடக்கி
கணப்பைப் போர்த்தி
உடல்கள்
சுருண்டு முடங்கும்

நிஜங்கள்
நிராகரிக்கப்படும் போது

பொய்ம்மைகள்
புதுப்புதுக் கோலம் புனைந்து
புன்னகை தவழ
வலம் வருவது
விசித்திரமல்ல
நடப்பின் சித்திரம்


Wednesday, July 11, 2012

என் ஞாபக நதி


-மலையருவி


பல நூறு, ஆயிரம், கோடி
நினைவுகளால்
பொங்கிப் பிரவகிக்கிறது
என் ஞாபக நதி

கருப்பையில்
கைகால் முடக்கித்
தலைகீழாக
நான்
இருந்தநாள் தொடங்கி
நீர் கசிந்து மெல்லத் திரண்டு
பள்ளிப்பருவத் தடம்கண்டு
வழிந்து நீர்த்தாரையாகி
வாலிப மிதப்பில்
சிற்றோடை, பேரோடையாகிப்
பெருக்கெடுத்து
இன்றோ
காலத்தின் கரைகள் ததும்ப
பெருவெள்ளமாய்ச் சுழித்தோடுகின்றது
என் ஞாபக நதி

அதில்
சுழல்களும் புதைகுழிகளும்
ஏராளம், ஏராளம்
அதில் புதையுண்டன
என் மனசாட்சிகள்

மேலே நிலத்தில்
பெருகி வழிந்தோடும்
நதிக்கு இணையாக
என் மன அடுக்குகளின் கீழே
ஒரு ரகசியநதி
ஓடிக்கொண்டிருப்பதை
நான் யாருக்கும் சொன்னதில்லை
அது நதியல்ல சாக்கடை.
அதில் மிதந்தோடும் பிணங்கள்
என் குரூரங்கள்

மலைச் சரிவுகளிலும்
பாறையின் முடுக்குகளிலும்
தாவிக் குதித்துத் தட்டுத் தடுமாறிய
என் ஞாபக நதி
இப்பொழுது
பரந்த சமவெளியில்
பரபரப்பின்றி
சலனமற்றுத் தவழ்ந்தோடுகின்றது

சுழித்தோடிய நதி
வாரிக் கொணர்ந்த
தன்முனைப்பும் மமதைகளும்
சமவெளியை நோக்கிய பாய்ச்சலில்
கரையொதுங்கி விட்டன.

இப்பொழுது
விரிந்து பரந்து
விசாலமாய்த்
தெளிந்து
மென்மையாய்ச் சில்லிட்டு
படித்துறை இறங்கி
மூழ்கிக் குளிப்பவர்
சிலிர்ப்புற்று உவப்புற உதவி

பின்..
மெலிந்து தளர்ந்து
கடல் நோக்கித்
தளர்நடை இடுகிறது
என் ஞாபக நதி

Tuesday, July 10, 2012

இப்படிக்கு -கலியுகக் கடவுள்.


-மலையருவி


பரந்து விரிந்த பிரபஞ்சத்தின்
ஒரே புண்ணிய பூமி
எங்கள் இந்திய தேசம்.

இந்தப் புனிதபூமி
ஆயிரமாயிரம்
ரிஷகளின் யோகிகளின் மகான்களின்
சரணாலயம்

இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும்
சரணாலயத்தில்
எண்ணிக்கை குறையவில்லை

தினம் தினம்
ஓயாத அழைப்பு
காற்றுவெளி எங்கும்
சப்தமாய் ரூபமாய்
தொடரும் அழைப்புகள்

தியானம்,
வெட்டவெளி தியானம்,
பிரபஞ்ச தியானம்
உள்முக தியானம்
இப்படி
எத்தனை எத்தனையோ
தியான அழைப்புகள்

யோகம்,
பூரண யோகம்,
குண்டலினி யோகம்
காயகல்ப யோகம்
இப்படி
எத்தனை எத்தனையோ
யோக அழைப்புகள்

தரிசனங்கள்,
உள்ளே பார், வெளியே பார்,
மேலே பார், கீழே பார்
முகக் கண்ணால் பார்,
அகக் கண்ணால் பார்
இப்படி
எத்தனை எத்தனையோ
தத்துவ தரிசன அழைப்புகள்

இடைவிடாத அழைப்புகளின்
கீழே
முக்கிய அடிக்குறிப்பு

-பற்றறு, பந்தங்களைத் துற
ஆசைகளை அடியோடு வேரறு,
சில ஆயிரங்களுடனோ
இலட்சங்களுடனோ
கோடிகளோடோ வா!
பரிபூரண நித்திய ஆனந்தம் நிச்சயம்-

இப்படிக்குக்
-கலியுகக் கடவுள்.



Monday, July 2, 2012

உள்ளியங்கும் இயக்கமே உயிர்வாழ்வு..

 மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


முட்செடிகளும் புற்களும்
முளைத்துக் கிடக்கும்
அந்த வெற்றுநிலத்தில்தான்
குடைவிரித்து மலரப்போகும்
காலங்களுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
காளான்கள்,
வித்துக்களாய்

வறண்டு இறுகி
வெடித்துக்கிடக்கும்
இறந்த காலத்துக்
குளங்களில்தான்
சுழன்று சுழன்று
நீந்திக் களிக்கப் போகும்
பொழுதுகளுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
மீன்கள்,
முட்டைகளாய்

வெப்பத்தில் ஆவியாகி
மடிகனத்துச் சூல்கொண்டு
மென்காற்றில் சிலிர்ப்புண்டு
பரந்த கடல்நோக்கி
ஒளிரப்போகும்
எதிர்காலக் கனவுகளோடு,
சிப்பிகளின் இதழ்நுழைய
சரம்சரமாய் வீழ்கின்றன
முத்துக்கள்,
மழைத்துளியாய்

உள்ளியங்கும் இயக்கமே
உயிர்வாழ்வின் அடையாளம்

இருப்பே சிதைந்து
இருள் சூழ்ந்தாலும்
உள்ளியங்கும் இயக்கத்தால்
உருவாகும் எதிர்காலம்.

Friday, June 29, 2012

வெப்பத்தை உடுத்தி…

-மலையருவி


தகிக்கும் கோடையில்
வெப்பத்தை உடுத்தி
வெளிக்கிளம்பிய பொழுதில்

நிர்வாண நாட்களின்
நினைப்பில்
மேனி
ஆடைகளைக் கிழித்தெறிய
அவசரம் காட்டும்

சரசம் வேண்டி
நாக்கில் படுத்து
காமுற்ற நீர்வேட்கை
விரக்தியில்
படுக்கை சுருட்டும்

அகோரப் பசியால்
நிழல் புசிக்க
நீளும் கால்கள்
கவளங்களை நினைத்து
பருக்கைகளில் பசியாறும்

Monday, June 25, 2012

திணிக்கப்படும் கவளங்களாய் மதிப்பெண்கள்


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



அந்த நாளில்
ஓராண்டாய்த் தொடர்ந்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
ஓயாமல் சுழன்றடித்து
மூர்க்கமாய்க் கரையேறியது,
தேர்வு முடிவுகளாய்

காற்றின்
கோரத்தாண்டவத்தில்
முகமுடைந்து நெஞ்சழிந்து
வாழ்வை
வினாக்குறிகளால் நிமிர்த்தியபடி
மாணவர்கள் பலர்

இணைய மையங்கள் தோறும்
மதிப்பெண்களைப்
பொறுக்கியபடி
பெற்றோர்களும் மாணவர்களும்

தூக்கி எறியப்பட்ட
மேற்கூரைகளாய்ப்
பாடப்புத்தங்கள்

வழியெங்கும்
நொறுக்கி வீசப்பட்ட
கேள்வி பதில்களும்
சூத்திரங்களும்
வரைபடங்களுமாக
மிதிபட்டுக் கிடந்தன
இளைஞர் கனவுகள்

காற்று மழையின்
கவலையில்
பட்டினி கிடந்த
தங்களின்
அகோரப் பசிக்குப்
பிள்ளைகள் வாயில்
திணிக்கப்படும் கவளங்களாய்
மதிப்பெண்கள்

புயல் ஓய்ந்த
திருநாளில்

புயலின் சுவடுகள் துடைத்து
புதுப்பொலிவை
எதிர்நோக்கிக்
காத்திருக்கும்
எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.

Friday, June 22, 2012

காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை


-மலையருவி




காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.


Friday, June 15, 2012

இலவசங்களின் விலை


-மலையருவி




ஆளுவோரின் இலவசங்கள்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வரப்பிரசாதம்..
ஏழ்மையை விரட்டும்
எளிய உத்தி..
சமத்துவம் பேணும்
சாமார்த்திய வழி..
ஆவேசப் பேச்சு
அறிக்கைகள்
மின்னணுப் பதாகைகள்
ஊடக விளம்பரங்கள்

இலவசங்கள்..
அவை இலவசங்கள் இல்லை
எங்கும் எப்போதும் எவையும்
இலவசங்கள் ஆவதில்லை

இலவசங்களின் முதல்பலி
மக்களின் சுயமரியாதை..
அதன்
பகாசூரப் பசிக்குத் தீனி
புதுப்புது வரிகள்

ஆளுவோருக்கு
அவை அமுதசுரபிகள்
ஆறு கொடுத்தால்
நூறு எடுக்கலாம்

இலவசங்களுக்குக்
கையேந்திக் கையேந்தி..
கூனிக் குறுகிக்
குப்புறக் கீழே
வீழ்ந்து கிடக்குது
குடிமக்களின் மாண்பு

கேள்வி கேட்க,
எதிர்க்குரல் எழுப்ப,
உரிமைக்குப் போராட
எதற்கும் திராணியற்று

இலவசங்களால்
கொள்ளைபோகும்
பல கோடிகளைப் பறிகொடுத்துச்
சிதறிய சில்லறைகளைத்
தேடிப் பொறுக்குவதில்

நம்
தேசம் தொலைகிறது



Wednesday, June 13, 2012

கொடும்பாவிகளின் தீச்சுவாலை

  
            -மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்

தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்

எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்

இத்தனைக்கும் நடுவே

நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்

Monday, June 11, 2012

ஆட்காட்டி விரல்


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஓட்டு யந்திரத்தின்
பொத்தான் அமுக்க..
வறுமைக்கோட்டுக்கும்
கீழே
தலைக்குப்புற
வீழ்ந்துகிடக்கும்
வாக்காளர்களின்
ஆட்காட்டி விரல்களுக்கு மட்டும்
சந்தனக்காப்பு...
சாமரவீச்சு...

தேர்தல் திருவிழாக்களில்
இலவசங்கள் எனும்
அலங்காரம் ஒளிவீச
வாக்குறுதித் தேர்ஏறி
பவனி வருகின்றன
அரசியல்வாதிகளின்
ஈர நாக்குகள்

பேரரசர்களுக்கும்
இளவரசர்களுக்கும்
இயற்றமிழால் புகழ்மொழிகள்
எதிர்க்கட்சிகளுக்கு
இசைத் தமிழால் அர்ச்சனைகள்
நாடகத் தமிழால்
யாவரும் ரசித்துக் களிக்க
தொப்பக் கூத்தாடிகளோடு
ஒய்யாரக் கூத்து

தேர்தல் நியாயங்கள்
அநியாயத்துக்குக்
காற்றில் பறக்க..
குடம், மூக்குத்திகளோடு
சேலை, வேட்டி
நூறு, ஆயிரமாய் ரொக்கத்துடன்
தாராளமாகத்
தண்ணீ புரண்டோட

வாழ்கிறது ஜனநாயகம்?

Monday, May 7, 2012

காமமும் கடவுளும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

சலிப்பு,
ஓயாத சலிப்பு,
வாழ்க்கையே சலிப்பூட்டுவதாய்..

வெறுமை,
எங்கும் வெறுமை,
வாழ்க்கையே வெறுமையாய்..

துன்பம்,
தீராத துன்பம்,
வாழ்க்கையே துன்பமயமாய்..

சலிப்பின்-
வெறுமையின்-
துன்பத்தின்- உச்சத்தில்

இமைமூடித் திறந்த 
கணப்பொழுதில்
புதிய வெளிச்சம்
புதிய சுவாசம்
புதிய நான்

சலிப்பின் முடிவில் 
ஈர்ப்பு.
வெறுமையின் முடிவில்
முழுமை.
துன்பத்தின் உச்சத்தில்
இன்பம்.

நாட்டம் 
எங்கும் எதிலும் நாட்டம்
அன்பு 
அனைத்தையும் நேசிக்கும் அன்பு

காதல்
காமம்
கடவுள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு துளியிலும்..

Thursday, May 3, 2012

மடத்தையும் வாங்கலாம் மகேசனையும் வாங்கலாம்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


இங்கே
எல்லாவற்றுக்கும்
எல்லோருக்கும்
விலையுண்டு

விலை படியாதவரையில்
எல்லாமே
தகுதியானவை
எல்லோருமே
யோக்கியர்கள்

நல்லவிலை கிடைத்தால்
விரைவில் விலைபோவர்-
வாக்காளர்கள்,
அரசியல்வாதிகள்,
அதிகாரிகள்.

கையில் பணமிருந்தால்
கனத்த பணமிருந்தால்
ஊழல் பணமிருந்தால்
ஊரார் பணமிருந்தால்

ஓட்டு வாங்கலாம்
பதவி வாங்கலாம்
சட்டத்தை வாங்கலாம்
நீதியை வாங்கலாம்

மக்களை வாங்கலாம்
மதத்தை வாங்கலாம்
மடத்தையும் வாங்கலாம்
மகேசனையும் வாங்கலாம்

வாங்கத் தெரிந்தவர்கள்
விலைபேசி வருவதும்
விற்கத் தெரிந்தவர்கள்
விலைகூறி நிற்பதும்

வேடிக்கையல்ல
வினையாற்றும் நேரமிது.