Thursday, June 9, 2011

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஆயிற்று
அரை நூற்றாண்டுகள்.

தேய்த்துத் தேய்த்து
அழுக்கை நீக்க
ஆன பொழுதுகள்
எத்தனை எத்தனையோ!

உடம்பின் அழுக்கைத்
தேய்த்துக் குளித்தேன்.
துணியின் அழுக்கை
அடித்துத் துவைத்தேன்.
தரையின் அழுக்கைப்
பெருக்கிக் கூட்டிக்
குப்பையில் கொட்டினேன்.

குப்பையும்
சாக்கடையும்
அழுக்கின் கொள்கலம்.

சூழ்ந்து நிற்கும்
குப்பைமேட்டிலும்,
சாக்கடை நீரிலும்
மனிதனின் அழுக்குகள்

அழுக்கைக் கண்டால்
அசூயை.. அசூயை..
அழுக்கை,
நீக்கிட நீக்கிட
அடுத்த அழுக்கு.

மனிதர்களின்றி
மண்ணில் அழுக்குகள் உண்டா?
அழுக்குகள் இன்றி
இங்கே மனிதர்கள் உண்டா?

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

சாதி அரசியல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெண்ணியம் பேசினான்,
எழுதினான்,
மேடைகளில் முழங்கினான்.
ஆண்கள் போராடி
பெண்ணுக்கு விடுதலையா?

பெண்கள் எதிர்த்தனர்,
எங்கள் விடுதலையை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம் என்று.

தலித்தியம் பேசினான்,
எழுதினான்,
போராடினான்.

தலித்தின் வலி
உனக்குத் தெரியுமா?
வேண்டாம்
ஓநாய் அழுகை என்றனர்.

இப்போது
ஒடுக்கப்பட்ட
தன் சொந்த சாதிக்காக
எழுதுகிறான்.

சொல்கிறார்கள்,
அவன் சாதி அரசியல்
பண்ணுகிறான் என்று!