Saturday, August 25, 2012

நழுவும் காலம்

-மலையருவி


கைளிலிருந்து
நழுவும் பந்தாய்க்
காலம் உருள,
கையின் இருப்பிடம்
இறந்த காலம்

சுழலும் காற்றாய்க்
காலம் வீச,
சிக்கிய
துகள்களுக்கோ
காற்றின் பாதை
நிகழ்காலம்

வில்லிடைக் கிளம்பும்
அம்பாய்க்
காலம் கடக்க
இலக்குகள் எல்லாம்
எதிர்காலம்

புடவியின் பார்வையில்
நழுவும் காலம்
பூமிப் பந்தின்
கானல் காட்சியே

Saturday, August 18, 2012

கடவுளிடம் கேட்ட வரம்!

-மலையருவி


வீதியின் விளிம்புச் சாக்கடை
சர்வ சுதந்திரமாய்ச்
சாலையின் நடுவில்..

சகதிக் களமான
சாலையைச் செப்பனிட்டு,
சாக்கடைக்கு வழியமைத்து,
ஊருக்கு வசதி செய்ய..

கோரிக்கை மனு,
நேரடிப் புகார்,
கண்டனக் கூட்டம்,
ஆர்ப்பாட்டம்,
மறியல்,
அடையாளப் பட்டினிப்போர்
என,
தொலைக்காட்சித் தொடராய்
நீண்ட போராட்டம்

ஆளுவோருக்குக் கேட்காத
மக்களின் குரல்,
அதிசயமாய்
ஆண்டவனுக்குக் கேட்டது.

ஊர்ப்பொது மன்றில்
அவசரமாய் ஆஜரானார்
கடவுள்.

என்ன வேண்டும்?
கடவுளின் கேள்விக்கு
ஆளாளுக்கு ஒரு கோரிக்கை.

சாலை, சாக்கடை வசதி,
குடி தண்ணீர், தொடர்ச்சியாய் மின்சாரம்,
பணம், பாத்திரங்கள்
மூக்குத்தி, புடவை
அரிசி, மண்ணெண்ணெய்,
சிலருக்குச் சரக்கு..
எனப் பட்டியல்கள் நீண்டன.

மலைத்தார் கடவுள்

எல்லோருக்கும் சேர்த்;து
ஏதாவது ஒன்று..
அதுதான் முடியும்
கறாராய்க் கடவுள்

நீண்ட விவாதத்தின் முடிவில்
ஊர்கூடி
ஒன்றே ஒன்று கேட்டது

இடைத்தேர்தல்

Tuesday, August 14, 2012

விடாமல் துரத்தும் கனவு

-மலையருவி

கவிஞர் மலையருவி

சாலை விபத்தொன்றில்
கைஉடைந்து
கட்டிலில் கிடக்கையில்

ஜவ்வு மிட்டாயாய்க்
காலம் நீளுகின்ற
அவஸ்தையில்

உறக்கம் தொலைத்துப்
படுக்கையில்
உருளவும் வழியின்றி
விட்டம் பார்த்துச் சலித்த விழிகள்
மெல்ல இமைமூடும்.

பசித்திருக்கும் வேளையில்
எனது இடதுகையே
எனக்குச் சோறூட்டத்
தவிக்கையில்
திடுமென முளைத்த
மூன்றாவது கையொன்று
வாய் ஊட்டும்

தட்டுத் தடுமாறி
மலையேறிக் குதிக்கையில்
கையில் பிணைத்த
கட்டுகள் கிழித்து
சிறகுகள் முளைத்துக்
காற்றை அலைக்கும்

பகைமுகத்தில்
ஆயுதம் தொலைத்து
எதிரிகள் சூழ
மரணத்தை எதிர்நோக்கி
விழிக்கையில்
உடைந்த கையின்
மாவுக் கட்டிலிருந்து
உடைவாள் ஒன்று நீளும்

கண்மூடும் பொழுதிலெல்லாம்
திரைவிரித்துக்
கனவுகள்
காட்சிகளாய் விரியும்
காட்சிகளில்
சுகித்தும் அதிர்ந்;தும்
திரை சுருட்டுகையில்
விழிகள் மீண்டும்
விட்டம் வெறிக்கும்.

Tuesday, August 7, 2012

புத்தகக் காட்டில் என்னைத் தொலைத்தேன்..

-மலையருவி


கவிஞர் மலையருவி

பிறர் முகமறியா
புத்தகக் காட்டில்
விரல் பிடிப்பார்
யாருமின்றி
நடைப்போட்ட பொழுதுகளில்
தொலைந்து போவேன்
என அறியேன்

சொற்களும் தொடர்களும்
நெடுமரங்களாய்
நீள்கொடிகளாய்ப்
புதர்களாய்ச் செறிந்து
அந்தகாரமாய் இருண்ட
அடர் வனத்தில்
நான்
வாசிக்கும் வேட்கையில்
அலைந்து திரிகையில்
சூரியனின்
கடக மகரப் பயணங்களைக்
கணக்கிடவே இல்லை

இடையிடையே
இசைபாடும்
இலக்கியக் குயில்கள்
என்னை ஆசுவாசப்படுத்தின
கவிதைகள்
பட்டாம்பூச்சிகளாய்
மின்னிச் சிறகடித்து
மயக்கின

இசங்களுக்கு
இரையாவது அஞ்சி
நடுங்கிக் கரந்து
நோட்டமிடுகையில்
அவற்றின் ஆற்றல் கண்டு
அடங்கி ஒடுங்கினேன்

தொடரும் விண்மீன்களால்
திசையறிய
வான்நோக்கி
விழிக்கையில்
புத்தகங்கள் அன்றி
வெளி ஒன்றும் காணேன்

திக்குகள் கரைந்து
விண்ணும் மண்ணும்
என்னுள் சங்கமிக்க
நூல்களில் நுழைந்து
வாசகங்களின்
அகத்தும் புறத்தும்
அலைந்து திரிந்ததில்
என்னைத் தொலைத்தேன்.

Sunday, August 5, 2012

கோடையின் உயிர்ப்படங்கும் நேரம்

-மலையருவி


கோடையின்
உயிர்ப்படங்கும் நேரம்
சுவாசத்தின் நூலிழை
அறுந்து போவதைக்
காணக் காத்திருக்கும்
வேளையில்
பெருமூச்சாய் வெளிப்படுகின்றது
அனல்காற்று

இன்றோ நாளையோ,
உறவினர்களுக்குச்
சேதி சொல்லிவிட
தென்மேற்குத் திசைநோக்கி
விழிகளை அனுப்பி
ஆயத்தமாகையில்
வக்கனையாய் உண்ண
ஆசைப்படும்
வயோதிகமாய்ச்
சுட்டெரிக்கிறது
வெயில்

கடைசியாக ஒருமுறை
முகத்தைப் பார்க்கவும்
முடிந்தால்,
இருந்து
இழவைக் கொண்டாடவுமாக
நாற்று முடிச்சிகளோடு
காத்திருக்கின்றனர்
விவசாயிகள்
பருவமழையை எதிர்நோக்கி

தென்மேற்கும்
வடகிழக்கும்
திசைகள் மட்டுமல்ல
கோடையின் குடல் கிழித்துக்
குருதியாய்க்
குளிர்மழை அருளும்
நரசிம்மம்