Thursday, January 31, 2013

கவிதை ஜெயித்துவிடும்


-மலையருவி


துண்டறிக்கையின்
பின்புற வெற்றிடத்தில்
எழுதப்பட்ட கவிதை?
வாசிக்கக் காத்திருந்தார் கவிஞர்

பார்வையாளர்களில் பலரும்
ஆளுக்கொரு தாள்ஏந்தி..

வாசித்து முடித்தவர்களுக்கு..
வேறு அவசர வேலை!
மெல்ல நழுவல்

நேரம் கடக்கக்.. கடக்க..
அரங்கு
காலி இருக்கைகளால்
நிரம்பி வழிந்தது

மைக்கைப் பிடித்தவர்களோ
சொல்லுக்குச் சொல்
வரிக்கு வரி
இருமுறைக்கு மும்முறையாய்
பதவுரை, பொழிப்புரை,
விளக்கவுரையாய்
விளங்கி..
விளக்கி..
உரத்த முழக்கம்

காத்திருந்த கவிஞரோ!
நிலவரத்தின் கலவரத்தால்
கவலையை முகத்தில் தேக்கி

எப்போதும் கைகொட்டி ரசிக்கும்
சுவைஞர் ஒருவர்,
இன்னும்ம்ம்.. அரங்கிலிருக்க!
நிம்மதிப் பெருமூச்சு

ரசிக்கத் தெரிந்தவர்
ஒருவர் போதும்
கவிதை ஜெயித்துவிடும்.

பாவம்,
கவிஞரின் நம்பிக்கை!

Tuesday, January 1, 2013

கான்கிரீட் மரம்


-மலையருவி



ஊரெங்கும்
கான்கரீட் தோப்புகள், காடுகள்
கண்ணில் நிறைந்து
கனவில்; ததும்பும்

வான்முட்ட வளர்ந்ததும்
வனப்புடன் விரிந்ததும்
புதரெனச் செறிந்ததும்
குறுமரமாய்க் குவிந்ததும்..
வகைவகையாய்
வனப்புமிகு மரங்கள்,
இரவில் மலரும்
வண்ணமிகு
மின்னொளிப் பூக்களில் மிளிரும்

நாடெங்கும் கான்கிரீட் மரங்கள்
எனக்கான மரம் எங்கே!

அப்பன் பாட்டன்
ஆசையுடன்
நாளைக்காக நட்டுவைத்த
நல்ல மரங்களின் நலன்சுருட்டும்
யோகமும்
எனக்கு வாய்க்கவில்லை.

கையில் மரக்கன்றும்
காலடியில் குழியுமாய்
கண்ணை விண்ணில்வைத்து
கடன் நோக்கிக்
கழித்துவிட்டேன்

குவளையில் கொண்டுவந்த
சேமிப்பும்
மண்உறிஞ்ச
ஒற்றை மரக்கன்றும்
வாடிக் காய்ந்ததுவே

வெட்டிய குழியருகே
வெறுமனே நான் குந்தி
வேடிக்கைப் பார்த்திருக்க
பக்கத்துக் குழியிலெ;லாம்
வான்முட்டும் வரை உயர்ந்து
வளர்ந்தனவே பயன்மரங்கள்

கான்கிரீட் மரம் வளர்க்கும்
பகல்கனவில் நான் திகைக்க
வெட்டிய குழி புதைந்து
விதையாகும் என் நிராசைகள்.