Sunday, December 19, 2010

எப்பிடி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம் !

-மலையருவி

மூன்று நாள்
மூட்டத்திற்குப் பின்
ஒருவழியாய்
மழை தொடங்கியது.

நல்ல வேளை
தீபாவளி தப்பித்தது.

முதலில்
சிறு மழைதான்..
விட்டு விட்டுப் பெய்தது.

அடுத்தநாள் காலை
அடைமழை தொடங்கியது.
வாரக் கணக்கில்..
மழை, மழை,
பேய்மழை.
மேகமுடைந்து
கொட்டித் தீர்த்தது

ஊர்
வெள்ளக் காடானது.
வயலாயிருந்த
குடியிருப்புகள்,
கொஞ்ச நஞ்சமிருந்த
விளைநிலைகள்
எல்லாம் ஏரிகளாயின.
ஏரிகள்
கடல்களாயின.

கபடி விளையாடிய
ஆற்று மணல்பரப்பில்
திடீர் வெள்ளம்.

போதுமா மழை?
போதும் போதும்பா!
இதுக்கே
இருபது முப்பது கிலோ
அரிசி போடுவாங்க..

இன்னும் கொஞ்சம்
ஊருக்குள்ளே
வெள்ளம் வந்தாதானே
மழை வெள்ள
நிவாரணம் கிடைக்கும்!

எப்பிடியும்
வீட்டுக்கு வீடு
ஆயிரம் ரூபா
போட மாட்டாங்களா?

Friday, December 17, 2010

கவிதையும் குழந்தையும் -மலையருவி

எழுதிய கவிதையை
என்ன செய்வது?

படித்துப் படித்துப் பார்த்தேன்
நிறைவில்லை..

நண்பரிடம் காட்டினேன்
நன்றாக வந்திருக்கிறது என்றார்.

பலரும்
ஆர்வத்தில் வாங்கி..!

வாசித்தார்கள் என நினைக்கிறேன்.

புரியலையே! என்றார் ஒருவர்
ஆரம்பிச்சிட்டீங்களா? இது இன்னொருவர்
ஒன்றும் சொல்லாமல்
கோபப் பார்வையுடன் மற்றொருவர்
அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்

ஏன் காட்டினோம் என்றிருந்தது

படம் வரையப்போறேன்
என்றிழுத்தவாறே
கவிதையின்
பின்பக்க வெள்ளைத் தாளில்
குதூகலத்துடன்
வரையத் தொடங்கியது.
குழந்தையொன்று.

இறுகியமனசு
இலேசானது.

Thursday, December 16, 2010

அநியாயத்துக்குக் கொள்ளை அடிக்கிறாங்கப்பா!! - மலையருவி

மாலைநேர
இந்தியன் குளம்பியக
உரையாடல்களுக் கிடையே
நண்பர் கேட்டார்..
ஒரு கோடிக்கு எத்தனை சைபர்?

கொஞ்சம் யோசனை செய்து
உறுதியில்லாத தொனியில்
விடை சொன்னேன்!

குழம்பிய வாறே
நண்பர் தொடர்ந்தார்,
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு
எத்தனை சைபர்?

உதட்டைப் பிதுக்கினேன்!

பக்கத்து நண்பர்
கொஞ்சம் கேலிகலந்த
சிரிப்பை உதிர்த்து,
ஒருதாள் கிடைக்குமா?
கேட்டவாறே
பேனாவைத் திறந்தார்.

எப்படியும்
எத்தனை சைபர் என்பது தெளிவாகிவிடும்!

கீரைக் கட்டோடு
காய்கறிகள் சகிதம்
உள்ளே நுழைந்த
புதிய நண்பர்
அலுத்துக் கொண்டார்.

ஒரு ரூபா! ரெண்டு ரூபா! வித்த
கீரைக்கட்டு
இப்போ அஞ்சி ரூபாயாம்
அநியாயத்துக்குக்
கொள்ளை அடிக்கிறாங்கப்பா!!!