Sunday, November 28, 2010

கணினிப் புரட்சி

மலையருவி
(முனவர் நா.இளங்கோ)
புதுச்சேரி-8


உலகம்
மேசைக்குள் அடங்கி
நம் மடிக்குள்ளும்
அடங்கிவிட்டதா?

இன்று
கணினி இல்லாத இடமேது?
செய்யாத பணியேது?

எழுத,
கணக்குப் போட,
படம் வரைய,
பாட்டுக் கேட்க,
திரைப்படம் பார்க்க
எல்லாமாகிப் போன
கணினி

வேகம், அதிவேகம்,
துல்லியம், நம்பகம்
அளவற்ற கொள்ளிடம்
எல்லாவற்றிலும்
மனிதனை மிஞ்சும்
மாயப் பெட்டகம்.

இணைய வலையில்
சிக்கிய மீன்களாய்
மனிதர்கள்

எதையும் தேடுபொறிகளில்
தேடிக்கொள்ளும்
விரல்களும் விழிகளும்

மின் அஞ்சல்,
இணைய வழி-
பார்க்க, பேச.
உரையாட, உறவாட
முகங்கள் அற்ற
இணைய வெளியில்
நீங்களும் நானும்

கணினிப் புரட்சி
எங்கும் எதிலும்

இடைவெளி,
தூரம், தொலைவுகள் இல்லாத
உலகம்

நாளை
மனிதர்களை
நட்பை, உறவை,
பாசத்தை, அன்பை
மீட்டெடுக்குமா
கணினிப் புரட்சி.

சுற்றுச் சூழல் உன் சுற்றம் -

மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)





பேரண்டத்தின் ஒரு துகளாம்
பூமிப் பந்து

ஆயிரம், இலட்சம்
கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய்

எரிந்து கொதித்து
குளிர்ந்து நனைந்து
நிலமாகி
வளிதோன்றி
நீர் சூழ்ந்து

நீர்ப்பாசியாகி
செடியாகி கொடியாகி மரமாகி
ஊர்வனவும் பறப்பனவும்
நடப்பனவும் ஆகிநின்ற
பல்லுயிர்ப் பெருக்கத்தின்
விளைநிலம்.

இயற்கை எனும்
இன்முகம் காட்டிய
இவ்வுலகு

மனித விலங்குகளால்
நீரும் கெட்டு
நிலமும் கெட்டு
காற்றும் கெட்டுக்
களையிழந்த தேனோ?

சுற்றுச் சூழல் உன் சுற்றம்

மனிதா!
பூமி
உனக்கு மட்டும் சொந்தமல்ல
கோடிக்கணக்கான
தாவர, பறவை, விலங்குகளின்
தாய்மண்

இயற்கை
உலகின் இதயம்
நிலத்தை, நீரை, காற்றைப்
பயன்படுத்து
பாழ்பாடுத்தாதே!