Saturday, August 18, 2012

கடவுளிடம் கேட்ட வரம்!

-மலையருவி


வீதியின் விளிம்புச் சாக்கடை
சர்வ சுதந்திரமாய்ச்
சாலையின் நடுவில்..

சகதிக் களமான
சாலையைச் செப்பனிட்டு,
சாக்கடைக்கு வழியமைத்து,
ஊருக்கு வசதி செய்ய..

கோரிக்கை மனு,
நேரடிப் புகார்,
கண்டனக் கூட்டம்,
ஆர்ப்பாட்டம்,
மறியல்,
அடையாளப் பட்டினிப்போர்
என,
தொலைக்காட்சித் தொடராய்
நீண்ட போராட்டம்

ஆளுவோருக்குக் கேட்காத
மக்களின் குரல்,
அதிசயமாய்
ஆண்டவனுக்குக் கேட்டது.

ஊர்ப்பொது மன்றில்
அவசரமாய் ஆஜரானார்
கடவுள்.

என்ன வேண்டும்?
கடவுளின் கேள்விக்கு
ஆளாளுக்கு ஒரு கோரிக்கை.

சாலை, சாக்கடை வசதி,
குடி தண்ணீர், தொடர்ச்சியாய் மின்சாரம்,
பணம், பாத்திரங்கள்
மூக்குத்தி, புடவை
அரிசி, மண்ணெண்ணெய்,
சிலருக்குச் சரக்கு..
எனப் பட்டியல்கள் நீண்டன.

மலைத்தார் கடவுள்

எல்லோருக்கும் சேர்த்;து
ஏதாவது ஒன்று..
அதுதான் முடியும்
கறாராய்க் கடவுள்

நீண்ட விவாதத்தின் முடிவில்
ஊர்கூடி
ஒன்றே ஒன்று கேட்டது

இடைத்தேர்தல்