Sunday, August 5, 2012

கோடையின் உயிர்ப்படங்கும் நேரம்

-மலையருவி


கோடையின்
உயிர்ப்படங்கும் நேரம்
சுவாசத்தின் நூலிழை
அறுந்து போவதைக்
காணக் காத்திருக்கும்
வேளையில்
பெருமூச்சாய் வெளிப்படுகின்றது
அனல்காற்று

இன்றோ நாளையோ,
உறவினர்களுக்குச்
சேதி சொல்லிவிட
தென்மேற்குத் திசைநோக்கி
விழிகளை அனுப்பி
ஆயத்தமாகையில்
வக்கனையாய் உண்ண
ஆசைப்படும்
வயோதிகமாய்ச்
சுட்டெரிக்கிறது
வெயில்

கடைசியாக ஒருமுறை
முகத்தைப் பார்க்கவும்
முடிந்தால்,
இருந்து
இழவைக் கொண்டாடவுமாக
நாற்று முடிச்சிகளோடு
காத்திருக்கின்றனர்
விவசாயிகள்
பருவமழையை எதிர்நோக்கி

தென்மேற்கும்
வடகிழக்கும்
திசைகள் மட்டுமல்ல
கோடையின் குடல் கிழித்துக்
குருதியாய்க்
குளிர்மழை அருளும்
நரசிம்மம்