Friday, July 27, 2012

இரவின் விளிம்பில்

-மலையருவி


இரவின் விளிம்பில்
உடைபடும் பனித்துளிகளில்
மென்மையாய்க் கரைகின்றன
என்
கனவுகள்

கரையும் கனவுகளிலிருந்து
கண்கள் கசக்கி
விழித்தெழுகின்றன
என்
கடந்த காலங்கள்

கடந்த காலங்களின்
இருள் துடைத்து
வெளுத்துச் சிவக்கின்றன
என்
மௌனங்கள்

மௌனங்களின்
அர்த்த அழுத்தங்களில்
உடைபட்டுக்
கண்ணாடிச் சில்லுகளாய்ச்
சிதறுகின்றது
என்
தனிமை

தனிமையின்
வெப்பச்சூட்டில் ஆவியாகி
வான்கலந்து
மழைத்துளிகளாய்
வழிகின்றன
என்
கண்ணீர்த் துளிகள்