Saturday, July 21, 2012

சித்திரங்கள் தோறும் வழிந்தோடும் குருதி ஆறு


-மலையருவி


என் வீட்டுச் சுவரில்
ஓவியங்களாய்த் தொங்குகின்றன
கடந்த காலங்கள்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடும்
குருதி ஆறுகளின்
குறுக்கே
பலி ஆட்டு மந்தைகள்
தலையைக் கவிழ்த்தபடி

தொங்கும் படங்களிலிருந்து
நீளுகின்றன
கழுமரங்களும் சூலங்களும்

உள்ளிருந்து
ஓயாமல் ஒலிக்கும்
கலவர, யுத்தப் பேரொலிகள்

யுத்தப் பின்னணிகள்,
தேசங்கள்
கண்டங்களைக் கடந்து,
பாலைவனங்களாய்,
நதிக்கரைகளாய்,
சமவெளிகளாய்,
குறுங்காடுகளாய்
திரைச்சீலைகளைப் போல்
மாறிக்கொண்டே இருக்கும்

சாந்தியும் சமாதானமும்
அன்பும் அகிம்சையும்
கருணையும் சமத்துவமும்
நிலைபெற வேண்டிக்
குரூரமாய்ச்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடுகின்றது
குருதி ஆறு.