Tuesday, July 10, 2012

இப்படிக்கு -கலியுகக் கடவுள்.


-மலையருவி


பரந்து விரிந்த பிரபஞ்சத்தின்
ஒரே புண்ணிய பூமி
எங்கள் இந்திய தேசம்.

இந்தப் புனிதபூமி
ஆயிரமாயிரம்
ரிஷகளின் யோகிகளின் மகான்களின்
சரணாலயம்

இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும்
சரணாலயத்தில்
எண்ணிக்கை குறையவில்லை

தினம் தினம்
ஓயாத அழைப்பு
காற்றுவெளி எங்கும்
சப்தமாய் ரூபமாய்
தொடரும் அழைப்புகள்

தியானம்,
வெட்டவெளி தியானம்,
பிரபஞ்ச தியானம்
உள்முக தியானம்
இப்படி
எத்தனை எத்தனையோ
தியான அழைப்புகள்

யோகம்,
பூரண யோகம்,
குண்டலினி யோகம்
காயகல்ப யோகம்
இப்படி
எத்தனை எத்தனையோ
யோக அழைப்புகள்

தரிசனங்கள்,
உள்ளே பார், வெளியே பார்,
மேலே பார், கீழே பார்
முகக் கண்ணால் பார்,
அகக் கண்ணால் பார்
இப்படி
எத்தனை எத்தனையோ
தத்துவ தரிசன அழைப்புகள்

இடைவிடாத அழைப்புகளின்
கீழே
முக்கிய அடிக்குறிப்பு

-பற்றறு, பந்தங்களைத் துற
ஆசைகளை அடியோடு வேரறு,
சில ஆயிரங்களுடனோ
இலட்சங்களுடனோ
கோடிகளோடோ வா!
பரிபூரண நித்திய ஆனந்தம் நிச்சயம்-

இப்படிக்குக்
-கலியுகக் கடவுள்.