Tuesday, August 14, 2012

விடாமல் துரத்தும் கனவு

-மலையருவி

கவிஞர் மலையருவி

சாலை விபத்தொன்றில்
கைஉடைந்து
கட்டிலில் கிடக்கையில்

ஜவ்வு மிட்டாயாய்க்
காலம் நீளுகின்ற
அவஸ்தையில்

உறக்கம் தொலைத்துப்
படுக்கையில்
உருளவும் வழியின்றி
விட்டம் பார்த்துச் சலித்த விழிகள்
மெல்ல இமைமூடும்.

பசித்திருக்கும் வேளையில்
எனது இடதுகையே
எனக்குச் சோறூட்டத்
தவிக்கையில்
திடுமென முளைத்த
மூன்றாவது கையொன்று
வாய் ஊட்டும்

தட்டுத் தடுமாறி
மலையேறிக் குதிக்கையில்
கையில் பிணைத்த
கட்டுகள் கிழித்து
சிறகுகள் முளைத்துக்
காற்றை அலைக்கும்

பகைமுகத்தில்
ஆயுதம் தொலைத்து
எதிரிகள் சூழ
மரணத்தை எதிர்நோக்கி
விழிக்கையில்
உடைந்த கையின்
மாவுக் கட்டிலிருந்து
உடைவாள் ஒன்று நீளும்

கண்மூடும் பொழுதிலெல்லாம்
திரைவிரித்துக்
கனவுகள்
காட்சிகளாய் விரியும்
காட்சிகளில்
சுகித்தும் அதிர்ந்;தும்
திரை சுருட்டுகையில்
விழிகள் மீண்டும்
விட்டம் வெறிக்கும்.