Monday, June 25, 2012

திணிக்கப்படும் கவளங்களாய் மதிப்பெண்கள்


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



அந்த நாளில்
ஓராண்டாய்த் தொடர்ந்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
ஓயாமல் சுழன்றடித்து
மூர்க்கமாய்க் கரையேறியது,
தேர்வு முடிவுகளாய்

காற்றின்
கோரத்தாண்டவத்தில்
முகமுடைந்து நெஞ்சழிந்து
வாழ்வை
வினாக்குறிகளால் நிமிர்த்தியபடி
மாணவர்கள் பலர்

இணைய மையங்கள் தோறும்
மதிப்பெண்களைப்
பொறுக்கியபடி
பெற்றோர்களும் மாணவர்களும்

தூக்கி எறியப்பட்ட
மேற்கூரைகளாய்ப்
பாடப்புத்தங்கள்

வழியெங்கும்
நொறுக்கி வீசப்பட்ட
கேள்வி பதில்களும்
சூத்திரங்களும்
வரைபடங்களுமாக
மிதிபட்டுக் கிடந்தன
இளைஞர் கனவுகள்

காற்று மழையின்
கவலையில்
பட்டினி கிடந்த
தங்களின்
அகோரப் பசிக்குப்
பிள்ளைகள் வாயில்
திணிக்கப்படும் கவளங்களாய்
மதிப்பெண்கள்

புயல் ஓய்ந்த
திருநாளில்

புயலின் சுவடுகள் துடைத்து
புதுப்பொலிவை
எதிர்நோக்கிக்
காத்திருக்கும்
எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.