Friday, June 22, 2012

காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை


-மலையருவி




காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.