Friday, September 21, 2007

உள்ளங்கையும் கட்டை விரலும் -மலையருவி

உள்ளங்கையும் கட்டை விரலும்

உலக உருண்டை
உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது

கை நீட்டிக் குரலெடுத்து
அழைத்ததெல்லாம் போய்
கட்டை விரலால் அழைப்பு

கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு
விரல்களாலே
தடவித் தடவி அழைப்பு
ஓயா அழைப்பு!

முகங்கள்
உருண்டையாய் நீண்டதாய்
தட்டையாய் கோணலாய்
அழகாய் விகாரமாய்
எத்தனை எத்தனை முகங்கள்
எல்லாம் கரைந்து
0 1 2 3 4 5 6 7 8 9
எண்களில் அமிழ்ந்து போயின

முகங்களற்ற உலகில்
வெட்டவெளியில்
மிரட்டல்கள் கோபங்கள்
சவால்கள் சமாதானங்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
மௌனங்கள்

பிரபஞ்சமே
உதடுகளில் தொடங்கி
செவிகளில் முடிந்து போனது
கண்கள் மட்டும் களவு போயின.

எதிரே
உறவும் நட்பும்
முகங்களைக் காணோம்
எண்கள்… எண்கள்…
கட்டைவிரல்
உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.

1 comment:

நளாயினி said...

பொருள் பொதிந்த கவிதை.