Wednesday, September 19, 2007

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும் - கவிதை

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்

மலையருவி


ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

செத்தவன் குடல்உருவி
செங்காவி உடையுடுத்து
எத்திசையும் மதப்பேய்கள்
எக்காளம் இடுகிறதே!

ரத்தத்தில் முகம்கழுவி
ரதங்களிலே யாத்திரையாய்
யுத்தத்தை மிகவேண்டி
ருத்திரமாய் வருகிறதே!

அந்த மதப்பேய்கள்
அண்டாமல் தடுத்துவிடு
முந்தி நீயிருந்து
மோதி அழித்துவிடு

அயோத்தி தெருக்களிலே-அது
ஆடிய ஆட்டத்தால்
அய்யோ நாம் படும்
துன்பம் அளவிட முடியாதே

குஜராத் தெருக்களிலே-இப்போ
குடியிருக்கும் சேதிகேட்டேன்
நிஜமாகச் சிலநாளில்
நம்மூர்க்கும் வந்திடலாம்

அப்போது அப்பேய்கள்
ஆர்ப்பாட்டம் தாங்காது
இப்போதே புறப்பட்டால்
இல்லாம செஞ்சிடலாம்

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

மதமான பேய்களையே
மயானத்துக்கு ஓட்டிவிடு
பதமாக அதையடக்கிப்
படுகுழிக்குத் தள்ளிவிடு

வேறுசில மதப்பேய்கள்
வெடிகுண்டு கையெடுத்து
சேறுபடும் ரத்தத்தில்
சந்தோஷப் படுகிறதே

பச்சை மதப்பேய்கள்
பம்பாய் கோவையென
உச்ச வெறிபிடித்து
ஊரை அழிக்கிறதே

கோவிலுக்குள் நுழைந்து
அப்பாவி மக்களின்
ஆவிகளைப் பறித்து
அஞ்சிடச் செய்கிறதே

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

எல்லா மதப்பேய்களையும்
எரிவிழியால் அழித்துவிடு
பொல்லாத பேய்களைப்
பொசுக்கியே சாம்பலாக்கு

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

இரத்தவெறி வேண்டாம்-அம்மா
யுத்தவெறி வேண்டாம்
குண்டுகள் வேண்டாம்-அம்மா
சூலங்களும் வேண்டாம்

மதம் வேண்டாம் தாயே- எங்களை
மனுஷங்களா வாழவிடு
ஆயதங்கள் வேண்டாம் தாயே-எங்களை
அன்போடு வாழவிடு.

1 comment:

நளாயினி said...

இரத்தவெறி வேண்டாம்-அம்மா
யுத்தவெறி வேண்டாம்
குண்டுகள் வேண்டாம்-அம்மா
சூலங்களும் வேண்டாம்

மதம் வேண்டாம் தாயே- எங்களை
மனுஷங்களா வாழவிடு
ஆயதங்கள் வேண்டாம் தாயே-எங்களை
அன்போடு வாழவிடு.

mmm