Saturday, April 12, 2008

நேற்று இன்று நாளை ---மலையருவி

நேற்று இன்று நாளை

நேற்றைய பொழுது
எப்போது முடிந்தது?
இன்றைய தொடக்கம்
எந்தக் கணத்தில்?
நாளைய தினத்தின்
வரவு அறிவேனோ?

இரவில் தூங்கிப்
பகலில் விழிக்கும்
உறக்கம் தொலைந்த
பொழுதுகளில்

உள்ளும் வெளியுமாய்
எல்லை வகுக்கும்
இருப்பிட இயக்கம்
துறந்த
தருணங்களில்

விளிம்புகள் அற்ற
வெளிகளில் சுற்றிய
முடிவறியாத
காலங்களில்

நேற்றைய பொழுது
எப்போது முடிந்தது?
இன்றைய தொடக்கம்
எந்தக் கணத்தில்?
நாளைய தினத்தின்
வரவு அறிவேனோ?

Sunday, November 18, 2007

துளித் துளியாய்...(2)

துளித் துளியாய்...(2)

கையில் உளி
கண்ணில் பசி
உருவாகும் சிற்பம்

கையில் உளி
கண்ணில் குருதி
சிதைந்த சிற்பம்

எழுத்தில் கரையும்
தொடுவானம்
எழுதியவன் வாழ்வு

அருகருகே அலைபேசிகளாய்க்
கணவன் மனைவி
மனங்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால்

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

யுகங்களாய்ச் சுழலும்
புவியின் வியர்வை
உப்புக் கடல்

சூரிய அகலைச்
சுற்றும் விட்டில்
பூமி

நிலவு அப்பளம் கடித்து வீசி
விண்மீன் பருக்கைகள் சிதறி
சாப்பிட்டெழுந்த குழந்தை யார்?

குடிசையின் பொத்தல்கள் வழியே
சூரியக்கிழவனின்
நரைமுடிகள்

Friday, November 9, 2007

ஒரு தீக்குச்சியின் தலையில்....

ஒரு தீக்குச்சியின் தலையில்......

மலையருவி

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

ஒரு சிறு பொறிக்குள்
ஒடுங்கிய மூச்சுகள்
அடங்கிய பேச்சுகள்

ஆண்டுகள் அடங்கி
ஆற்றலாய் நிமிர
ஐந்து விரல்களுக்குள்
ஓர் அடங்காச் சக்தி

சூரியச் சிவப்பின்
விடியலுக்குள்
கருங்காடுகளின் கல்லறை

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

நிமிரத்தான் போகிறேன்

நிமிரத்தான் போகிறேன்

மலையருவி

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

அதற்குள் ஏனிந்த ஏளனங்கள்
எதிர்பாரா ஏச்சுகள! பேச்சுகள!

எதைத் தேடி வந்தேனோ?
அதை எடுக்க வேண்டாமா?

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

Sunday, November 4, 2007

எங்கே கவிதை?

எங்கே கவிதை?

அதைத் தேடி
இதைத் தேடி
தேடித் தேடித் தேய்ந்தேன்

சொற்களை நிறுத்திச்
சுமைகளை ஏற்றினேன்

நகர மறுத்தன

உத்திகளாலே குத்தித் தள்ளி
அணிகளாலே நையப் புடைத்து
மெல்ல நகர்த்தினேன்

சொற்கள் செத்தன.

மீண்டும் மீண்டும்
கவிதை தேய்ந்தது

கடைசி முயற்சியாய்
எனக்குள் பயணம்
என்னை அடைய…

எங்கே கவிதை?

நானே… நானே…!!!

நானே… நானே…!!! ---மலையருவி


எழுதும் தூரிகை
வண்ணக் குழம்பில்
நானே குழைந்து
ஓவிய மாகிறேன்

தூரிகை பிடித்த
விரல்களின் வழியே
நானே படர்ந்து
காட்சியாய்க் கரைகிறேன்

மயக்கும் இசையில்
மகுடியின் லயிப்பில்
நானே பாம்பாய்
நெளிந்து ஆடுகின்றேன்

ஊதும் குழலில்
காற்றாய் கரைந்து
உயிரே இசையாய்
உருகிடு கின்றேன்.