Friday, November 9, 2007

ஒரு தீக்குச்சியின் தலையில்....

ஒரு தீக்குச்சியின் தலையில்......

மலையருவி

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

ஒரு சிறு பொறிக்குள்
ஒடுங்கிய மூச்சுகள்
அடங்கிய பேச்சுகள்

ஆண்டுகள் அடங்கி
ஆற்றலாய் நிமிர
ஐந்து விரல்களுக்குள்
ஓர் அடங்காச் சக்தி

சூரியச் சிவப்பின்
விடியலுக்குள்
கருங்காடுகளின் கல்லறை

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

நிமிரத்தான் போகிறேன்

நிமிரத்தான் போகிறேன்

மலையருவி

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

அதற்குள் ஏனிந்த ஏளனங்கள்
எதிர்பாரா ஏச்சுகள! பேச்சுகள!

எதைத் தேடி வந்தேனோ?
அதை எடுக்க வேண்டாமா?

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

Sunday, November 4, 2007

எங்கே கவிதை?

எங்கே கவிதை?

அதைத் தேடி
இதைத் தேடி
தேடித் தேடித் தேய்ந்தேன்

சொற்களை நிறுத்திச்
சுமைகளை ஏற்றினேன்

நகர மறுத்தன

உத்திகளாலே குத்தித் தள்ளி
அணிகளாலே நையப் புடைத்து
மெல்ல நகர்த்தினேன்

சொற்கள் செத்தன.

மீண்டும் மீண்டும்
கவிதை தேய்ந்தது

கடைசி முயற்சியாய்
எனக்குள் பயணம்
என்னை அடைய…

எங்கே கவிதை?

நானே… நானே…!!!

நானே… நானே…!!! ---மலையருவி


எழுதும் தூரிகை
வண்ணக் குழம்பில்
நானே குழைந்து
ஓவிய மாகிறேன்

தூரிகை பிடித்த
விரல்களின் வழியே
நானே படர்ந்து
காட்சியாய்க் கரைகிறேன்

மயக்கும் இசையில்
மகுடியின் லயிப்பில்
நானே பாம்பாய்
நெளிந்து ஆடுகின்றேன்

ஊதும் குழலில்
காற்றாய் கரைந்து
உயிரே இசையாய்
உருகிடு கின்றேன்.

எதில் வெற்றி?

எதில் வெற்றி?

மலையருவி

பொய்முடி புனைந்தாள்
கூந்தல் நீண்டு
மலர்சூடி மணந்தது.

எதில் வெற்றி?

பொய்யின் இருப்பிலா?
இருப்பின் மறைப்பிலா?

இருட்டுக் காட்டில்...

இருட்டுக் காட்டில்

மலையருவி


கண்களை மூடு
விழிகளைப் புதை

பார்வைப் பூக்களை
வெளிச்சப் பருந்துகள்
கவர விருப்பதைக்
கருத்தில் நிறுத்து

கண்களின் கற்பைக் காக்க
இயற்கைக் காட்சியில்
இரண்டறக் கலந்து
காட்சிக் கருவைச் சுமந்து வா!

மின்ஒளி விலங்குகள்
சுற்றிச் சீறும்
பாழ் நகருக்குப்
பயந்து ஒதுங்கி
இருட்டுக் காட்டில்
வாழ்வைத் தொடங்கு

Thursday, October 18, 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும்
எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்