Saturday, January 25, 2014

பேச்சுவார்த்தை.


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


அன்றைக்கு,
நாக்கால் சொறிந்துகொள்ளும் சுகத்தில்
நீ தொலைத்துவிட்ட தன்னம்பிக்கை
தவறிப் போய்விடவில்லை.
அது
அவசரத்தில்
யார் வீட்டுத் தோட்டத்திலோ
புதையுண்டு போயிருக்கிறது.

சரி! பேசுவோம்.
நீயும் வா! அவனையும் கூப்பிடு!
பேசுவோம்,
பேசிப் பார்ப்போம்.
எல்லாமே,
பேசக்கூடிய விசயங்கள்தான்.

கூடிக் கூடிக்
கைகளை உயர்த்தாதே!
மூச்சில் அனலை ஏற்றாதே!
அது ஆபத்தின் அறிகுறி.

முகத்தில் வழியும்
இரத்தத்தைத் துடை!
கை கால்களை அசைக்காதே!
முனகலை நிறுத்து!
எல்லாமே,
பேசத் தீர்க்கக் கூடியதுதான்.

பேசாதே!
குரலை உயர்த்தாதே!
அது அதிகப் பிரசங்கித்தனம்.
தலையை ஆட்டு
மேலும்.. கீழுமாய்..
ஆகா! ஆகா!!
தீர்ந்தது பிரச்சனை.

எல்லாமே,
பேசத் தீர்க்கக் கூடியதுதான்.