Wednesday, May 18, 2011

மனிதத் தின்னிகள்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



காலைநேரக் கண்விழிப்பு
அநிச்சையாய்க்
கண்ணும் மனமும் தேட,

வீடெங்கும்
சிதறிக் கிடக்கும்
செய்திக் குப்பைகள்
வார்த்தைகளும் படங்களுமாய்.

பழைய குப்பைகள் விலக்கி
புதிய குப்பைகள் தேடும்
கண்ணும் மனமும்.

காலை தினசரி..
பதட்டம் தொற்றிப்
புரட்டப் புரட்ட..

முதல் பக்கம் தொடங்கி
கடைசிப் பக்கம் வரை
பெரிய செய்தி
சிறிய செய்தி
பெட்டிச்செய்தி
கடைசிச் செய்தி
தேடத் தேடச்
சலித்தது மனசு

தாளின்
உள்ளே இறங்கியும்
செய்திகளைக்
கொட்டிக் கவிழித்தும்
தீவிர தேடல்

ஏன் இப்படி?
எங்கே! சாவும் பிணமும்
எங்கே! கொலையும் விபத்தும்
எங்கே! யுத்தமும் வெறியும்
எங்கே! இரத்தமும் சதையும்
என்ன எழவு செய்தித்தாள்?
இவைகளில்லாமல்

வழிந்தோடும் இரத்தமின்றி
சிதறிய உடல்களின்றி
எழுத்துக்களும் படங்களும்
வெறுமையாய்

கண்வெறிகொள
மனசு பிறாண்ட
எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும்
பித்தேற.. பித்தேற..

வேறுவழியில்லை
கண்ணும் மனசும் பரபரக்க

பழைய செய்தித்தாள்கள்
பழைய குப்பைகள்
புரட்டப் புரட்ட
மனசு நிறைந்தது

எழுத்துக்களும் படங்களும்
முழுமையுற
குவியல் குவியலாய்ப்
பிணங்கள்

மதக்கலவரத்தில்
எட்டுபேர் உயிரோடு எரிப்பு!

கார் குண்டு வெடிப்பு
இருபது பேர் உடல் சிதறி மரணம்!

இரசாயண குண்டு வீச்சு
எரிந்து கரிக்கட்டைகளான
அப்பாவிப் பொதுமக்கள்!

இரத்தம், நிணம்,
பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…

பிணவாடை மூக்கைத் துளைக்க
பித்தம் தெளிய
இருப்புக்குச் சேதமில்லாமல்
நாள் தொடங்கியது