Friday, September 4, 2009

விருந்தோம்பலும் பந்தியும் -மலையருவி

விருந்தோம்பலும் பந்தியும்

மலையருவி

பந்தி என்பது பகரும் காலை
முதல், இடை, கடை என மூன்றாகும்மே


முதல் பந்தி
பார்க்க உசிதம்
விருந்து வகைகள்
ஒன்றும் குறையாமல்
ஒய்யாராமாக
அதனதன் இடத்தில்
அமர்ந்திருக்கும்
அழகே தனி அழகு

ஆனால்
எப்பொழுதோ பரிமாறி
ஆறி அவலாகிச்
சூடும் சுவையும் குன்றியிருக்கும்

கடைசிப் பந்தி
கவலை அளிக்கும்
விருந்துக்கு அழகாம்
வடை, அப்பளம், பாயாசம்
பருப்பு நெய்யெலாம்
பந்திக்குப் பந்தி
பற்றாக்குறையாகி
கடைசிப் பந்தியில்
கைவிரிக்கும்

இடைநிலைப் பந்திகளே
இனிமை சேர்ப்பன

ஆனாலும்
இடைநிலைப் பந்திகளில்
இருந்து சாப்பிட
முன் அனுபவங்கள்
ரொம்பவும் முக்கியம்

முந்தைய பந்தி
முடியும் வரிசையை
முழுதாய் அறிந்து
முண்டி நின்று
கண்கொத்திப் பாம்பாய்
கவனிக்க வேண்டும்

முன்னவர் உண்டு முடித்து
இலைமடித்து
எழுவுதற்குள்ளாக
அந்த இருக்கையில்
நுட்பமாய் உடலை
நுழைத்து அமரணும்
இல்லையென்றால்
கண்மூடி கண்திறப்பதற்குள்
பந்தி நிரம்பி -நம்மைப்
பார்த்துச் சிரிக்கும்

அடுத்த பந்திக்கும்
இதே நிலைதான்

கவனம் பிசகாமல்
இடம் பிடித்தபின்
எச்சில் இலை
முன்னே இருந்தாலும்
காணாதது போல்
கடமையில்
கண்ணாயிருக்கணும்

ஆயிற்று,

இலையெடுத்து
மேசை துடைத்து
வகையாய் இலைபோட்டு
வீசி எறிந்தும்
கொட்டியும் ஊற்றியும்
சிந்தியும் சிதறியும்
விருந்து பரிமாறும்
விந்தைமிகு பக்குவத்தில்

தமிழனின் விருந்தோம்பல்
தலைகுப்புற
வீழ்ந்து கிடப்பதைப் பற்றி
நமக்கென்ன கவலை!