Sunday, August 30, 2009

கவர்ச்சித் தலைவர்கள் தேவை -மலையருவி

கவர்ச்சித் தலைவர்கள் தேவை

மலையருவி


தேவை
கவர்ச்சித் தலைவர்கள்

நாளை ஆட்சியைப் பிடிக்க
இன்று
அவசரத் தேவை
வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்

முகமற்ற
முந்தைய தலைகளின்
முகவரிகள்
தொலைந்து போனதால்
புதிய தலைகள்
கவர்ச்சித் தலைகள்
கட்டாயம் வேண்டும்

பெருந்தலைவர்களின்
பெருங்காய டப்பாவையே
எத்தனை நாள்தான்
முகர்ந்து கிடப்பது

வசீகரமிக்க
வளப்பமான
வண்ண முகத்தோடு
தேவை
சில கவர்ச்சித் தலைகள்

வண்ணத்திரையின்
மின்னொளிகளில் மின்னும்
அட்டைக் கத்தித் தலைவர்கள்
அவசியம் வேண்டும்

நோட்டைக் குவிக்கும்
கோஷ்டித் தலைகள்
பேதங்களற்று
பெரிய மனதோடு
வலைகளை வீசிக் காத்திருக்க
கவர்ச்சித் தலைவர்கள்
கட்டாயம் சிக்குவர்

நாளைய வாக்குவங்கியாம்
இளைய தளபதிகளுக்கு
இன்முக வரவேற்பு

நாளை ஆட்சியைப் பிடிக்க
இன்று
அவசரத் தேவை
வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்

2 comments:

சி.கருணாகரசு said...

கவிதை நல்லா இருக்குங்க முனைவரே.

என்னத்தச் செய்ய நாடு அப்படி போவுது
வீனா நம்ம மனசுத்தான் நோவுது.

முனைவர் நா.இளங்கோ said...

தோழர் கருணாகரசு! வதைகளாலும் வலியாலும் ரணம்பட்ட நெஞ்சம் வேறென்ன செய்யும் நன்றி!