Wednesday, April 1, 2020

கனவு தேசத்தில்...


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



கனவு தேசத்தில்
அவசரநிலை
மக்கள் வெளியேற உத்தரவு
வீடில்லை
தொழில் இல்லை
உணவில்லை
கவலை வேண்டாம்

நல்ல மேய்ப்பர்கள்
உங்களைக்
காலாற மேய்ப்பார்கள்
குழலூதி
தேவகானம் இசைத்து
தொலை தூரத்து
அக்கரைப் பச்சையைக் காட்டி
மேயச்சொல்லி
வழியனுப்புவார்கள்

பசி பட்டினி உயிரச்சம்
தேச விரோதம்
வழியெங்கும்
கோமாதாயும் கோமியமும்
சர்வரோக நிவாரணியாய்க்
காத்து நிற்கும்

தலைச்சுமை
கைச்சுமைகளை
உதறி வீசுங்கள்
பாரம்சுமக்க
படைத்தவன் வருவான்

வயிறுகாய்ந்து
நடைதேய்ந்து
நாவறண்டு
கண்கள் இருண்டு
சுருண்டு வீழ்ந்து
செத்து மடிந்தாலும்
அவசரநிலை
கவனத்தில் இருக்கட்டும்

உதவிக்கரம் நீட்ட
ஆண்டவனோ
ஆள்கிறவனோ
வரவில்லையே என
வாய்விட்டுக் கூவாதே!

இது புண்ணிய தேசம்
மகான்களின் மண்
நம்பிக்கை அவசியம்
நாளைய
பொற்காலத்தை
நினைத்துக் கொண்டே
கண்களை மூடு.