Sunday, December 19, 2010

எப்பிடி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம் !

-மலையருவி

மூன்று நாள்
மூட்டத்திற்குப் பின்
ஒருவழியாய்
மழை தொடங்கியது.

நல்ல வேளை
தீபாவளி தப்பித்தது.

முதலில்
சிறு மழைதான்..
விட்டு விட்டுப் பெய்தது.

அடுத்தநாள் காலை
அடைமழை தொடங்கியது.
வாரக் கணக்கில்..
மழை, மழை,
பேய்மழை.
மேகமுடைந்து
கொட்டித் தீர்த்தது

ஊர்
வெள்ளக் காடானது.
வயலாயிருந்த
குடியிருப்புகள்,
கொஞ்ச நஞ்சமிருந்த
விளைநிலைகள்
எல்லாம் ஏரிகளாயின.
ஏரிகள்
கடல்களாயின.

கபடி விளையாடிய
ஆற்று மணல்பரப்பில்
திடீர் வெள்ளம்.

போதுமா மழை?
போதும் போதும்பா!
இதுக்கே
இருபது முப்பது கிலோ
அரிசி போடுவாங்க..

இன்னும் கொஞ்சம்
ஊருக்குள்ளே
வெள்ளம் வந்தாதானே
மழை வெள்ள
நிவாரணம் கிடைக்கும்!

எப்பிடியும்
வீட்டுக்கு வீடு
ஆயிரம் ரூபா
போட மாட்டாங்களா?

Friday, December 17, 2010

கவிதையும் குழந்தையும் -மலையருவி

எழுதிய கவிதையை
என்ன செய்வது?

படித்துப் படித்துப் பார்த்தேன்
நிறைவில்லை..

நண்பரிடம் காட்டினேன்
நன்றாக வந்திருக்கிறது என்றார்.

பலரும்
ஆர்வத்தில் வாங்கி..!

வாசித்தார்கள் என நினைக்கிறேன்.

புரியலையே! என்றார் ஒருவர்
ஆரம்பிச்சிட்டீங்களா? இது இன்னொருவர்
ஒன்றும் சொல்லாமல்
கோபப் பார்வையுடன் மற்றொருவர்
அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்

ஏன் காட்டினோம் என்றிருந்தது

படம் வரையப்போறேன்
என்றிழுத்தவாறே
கவிதையின்
பின்பக்க வெள்ளைத் தாளில்
குதூகலத்துடன்
வரையத் தொடங்கியது.
குழந்தையொன்று.

இறுகியமனசு
இலேசானது.

Thursday, December 16, 2010

அநியாயத்துக்குக் கொள்ளை அடிக்கிறாங்கப்பா!! - மலையருவி

மாலைநேர
இந்தியன் குளம்பியக
உரையாடல்களுக் கிடையே
நண்பர் கேட்டார்..
ஒரு கோடிக்கு எத்தனை சைபர்?

கொஞ்சம் யோசனை செய்து
உறுதியில்லாத தொனியில்
விடை சொன்னேன்!

குழம்பிய வாறே
நண்பர் தொடர்ந்தார்,
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு
எத்தனை சைபர்?

உதட்டைப் பிதுக்கினேன்!

பக்கத்து நண்பர்
கொஞ்சம் கேலிகலந்த
சிரிப்பை உதிர்த்து,
ஒருதாள் கிடைக்குமா?
கேட்டவாறே
பேனாவைத் திறந்தார்.

எப்படியும்
எத்தனை சைபர் என்பது தெளிவாகிவிடும்!

கீரைக் கட்டோடு
காய்கறிகள் சகிதம்
உள்ளே நுழைந்த
புதிய நண்பர்
அலுத்துக் கொண்டார்.

ஒரு ரூபா! ரெண்டு ரூபா! வித்த
கீரைக்கட்டு
இப்போ அஞ்சி ரூபாயாம்
அநியாயத்துக்குக்
கொள்ளை அடிக்கிறாங்கப்பா!!!

Sunday, November 28, 2010

கணினிப் புரட்சி

மலையருவி
(முனவர் நா.இளங்கோ)
புதுச்சேரி-8


உலகம்
மேசைக்குள் அடங்கி
நம் மடிக்குள்ளும்
அடங்கிவிட்டதா?

இன்று
கணினி இல்லாத இடமேது?
செய்யாத பணியேது?

எழுத,
கணக்குப் போட,
படம் வரைய,
பாட்டுக் கேட்க,
திரைப்படம் பார்க்க
எல்லாமாகிப் போன
கணினி

வேகம், அதிவேகம்,
துல்லியம், நம்பகம்
அளவற்ற கொள்ளிடம்
எல்லாவற்றிலும்
மனிதனை மிஞ்சும்
மாயப் பெட்டகம்.

இணைய வலையில்
சிக்கிய மீன்களாய்
மனிதர்கள்

எதையும் தேடுபொறிகளில்
தேடிக்கொள்ளும்
விரல்களும் விழிகளும்

மின் அஞ்சல்,
இணைய வழி-
பார்க்க, பேச.
உரையாட, உறவாட
முகங்கள் அற்ற
இணைய வெளியில்
நீங்களும் நானும்

கணினிப் புரட்சி
எங்கும் எதிலும்

இடைவெளி,
தூரம், தொலைவுகள் இல்லாத
உலகம்

நாளை
மனிதர்களை
நட்பை, உறவை,
பாசத்தை, அன்பை
மீட்டெடுக்குமா
கணினிப் புரட்சி.

சுற்றுச் சூழல் உன் சுற்றம் -

மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)





பேரண்டத்தின் ஒரு துகளாம்
பூமிப் பந்து

ஆயிரம், இலட்சம்
கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய்

எரிந்து கொதித்து
குளிர்ந்து நனைந்து
நிலமாகி
வளிதோன்றி
நீர் சூழ்ந்து

நீர்ப்பாசியாகி
செடியாகி கொடியாகி மரமாகி
ஊர்வனவும் பறப்பனவும்
நடப்பனவும் ஆகிநின்ற
பல்லுயிர்ப் பெருக்கத்தின்
விளைநிலம்.

இயற்கை எனும்
இன்முகம் காட்டிய
இவ்வுலகு

மனித விலங்குகளால்
நீரும் கெட்டு
நிலமும் கெட்டு
காற்றும் கெட்டுக்
களையிழந்த தேனோ?

சுற்றுச் சூழல் உன் சுற்றம்

மனிதா!
பூமி
உனக்கு மட்டும் சொந்தமல்ல
கோடிக்கணக்கான
தாவர, பறவை, விலங்குகளின்
தாய்மண்

இயற்கை
உலகின் இதயம்
நிலத்தை, நீரை, காற்றைப்
பயன்படுத்து
பாழ்பாடுத்தாதே!

Friday, August 6, 2010

பேரண்டமும் நானும் -மலையருவி-

அடடே
செவ்வாய் தோஷம்!
பரிகாரம் பண்ணு
மகாலட்சுமியாட்டம் பொண்ணு வருவா?

பேர்ல ஒரு A கூட சேர்த்துக்க!
அப்பத்தான்
கூட்டுத்தொகை 2 -ல வரும்
அப்புறம் பாரு
கலக்டர் உத்தியோகம்தான்?

ஒன்னோட ராசிக்கு
நீலமே ஆகாது
அதக்கழட்டு மொதல்ல!
பச்சக்கல்லப் போட்டுப்பாரு
கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்?

வாசக்காலு வச்ச
திசையே சரியில்ல!
ம்.. அப்பறம்
அடுப்பங்கரையை மாத்து!
தென்கிழக்குத்தான்
அக்கினி மூலை
மகாராசனாட்டம் பவனிவருவ?

சித்தன்மல பீர்சாமியார
ஒருதடவைப் பார்த்து
தட்சனை கொட்டி
கும்பிட்டு வந்தா
கோடி கோயிலை சுத்துன புண்ணியம்?

தோஷம், பரிகாரம்
ராசி, வாஸ்து
சாமி, தட்சணை
ஓயாத இரைச்சல்களுக்கு நடுவே!

பேரண்டப் புழுதியின் துகள்கள்!
வானக் கடலின் துளிகள்!
துகள்கள்
துளிகளின்
உள்ளியங்கும் பேரண்டம்.

இடவலமற்று
திசைகளற்று
மொழியற்று
வடிவுகளற்று
நிறமற்று
வேடங்களற்ற
பேரண்டம்

என்னுள் தொடங்கி பேருருக் கொள்ளும்
என்னும் அடங்கி சூக்குமமாகும்

பேரண்டமும் நானும் ....

-மலையருவி-

Tuesday, March 2, 2010

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

மலையருவி

சாமியார்கள்
இரண்டுவகை

முதல்வகை,
போலிச் சாமியார்கள்.

இரண்டாம்வகை,
லீலைகள் இன்னும்
அம்பலமாகாத சாமியார்கள்

யாரைச்சொல்லி
யாரைநோக!

ஒருபாதி
மக்களின் அறியாமையும்
மறுபாதி
மக்களின் பேராசையுமே
இந்தப் போலிகளுக்கு
மூலதனம்

ஆண்டவன் பேரால்
நடக்கும்
அநாகரீகங்களும்
அநியாயங்களும்
அங்கீகரிக்கப்படுவது
எதனால்?

மதத்தின் பெயரால்!

ஒழிக்கப்பட வேண்டுவன எவை?

சாமியார்களா?
மதங்களா?

Saturday, January 30, 2010

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

தேய்த்த நாற்காலிகளை
விட்டுவிட
மனம் வரவில்லை

வயதான காலத்தில்
புது இடத்தில் நிம்மதியான
தூக்கம் வராதாம்

வீட்டில்
காய்கறி மளிகை ரேஷன்
வாங்கிச் சுமக்கும்
சிக்கலில் சிக்காமல்
தப்பிக்க நல்ல வழி

நாற்காலி
கேண்டீன்
கழிப்பறை
பழகிப்போனவைகள்

பணிஓய்வுக்குப் பின்னும்
பணி நீட்டிப்பு

வீட்டில் இருக்கும்
அந்தத் தெண்டத் தீவட்டி
மகனுக்கு
எம்பளாய்மண்ட் நியூஸ் பேப்பர்
மறக்காமல் வாங்கனும்