Friday, September 21, 2007

உள்ளங்கையும் கட்டை விரலும் -மலையருவி

உள்ளங்கையும் கட்டை விரலும்

உலக உருண்டை
உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது

கை நீட்டிக் குரலெடுத்து
அழைத்ததெல்லாம் போய்
கட்டை விரலால் அழைப்பு

கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு
விரல்களாலே
தடவித் தடவி அழைப்பு
ஓயா அழைப்பு!

முகங்கள்
உருண்டையாய் நீண்டதாய்
தட்டையாய் கோணலாய்
அழகாய் விகாரமாய்
எத்தனை எத்தனை முகங்கள்
எல்லாம் கரைந்து
0 1 2 3 4 5 6 7 8 9
எண்களில் அமிழ்ந்து போயின

முகங்களற்ற உலகில்
வெட்டவெளியில்
மிரட்டல்கள் கோபங்கள்
சவால்கள் சமாதானங்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
மௌனங்கள்

பிரபஞ்சமே
உதடுகளில் தொடங்கி
செவிகளில் முடிந்து போனது
கண்கள் மட்டும் களவு போயின.

எதிரே
உறவும் நட்பும்
முகங்களைக் காணோம்
எண்கள்… எண்கள்…
கட்டைவிரல்
உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.

Wednesday, September 19, 2007

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எண்ணங்களாலே பின்னிய வலைகளில்
சிக்கிய கவிதையின்
இரத்தம் குடித்து
இளைப்பாறுகின்றது…
சிந்தனைச் சிலந்தி.

வார்த்தைப் புழுவைத்
தூண்டிலில் மாட்டி
சிரத்தையின்றிக்
கவிதையைப் பிடிக்க
தூண்டிலோடு போனது,
மீன்.

சொற்களைக் கொண்டு
விண்ணை முட்டக்
கலைநயத்தோடு கட்டிய மாளிகை
யதார்த்த உலகின்
அனுபவ அதிர்வுகளில்
ஆட்டம் காண்கிறது.

சொல்லுக்குள்ளே பொருளைத் தேடும்
தொடர்ந்த முயற்சியில்
மூச்சு முட்டுகிறது…
சுவாசத்திற்காக
தலை நீட்டுகையில்
கவிதை வானம்
தலைமேல் கவிழ்கிறது.

கழனிகளிலே
கவிதைப் பயிர்கள்
வார்த்தைக் களைகளால்
வளர்ச்சி குன்றின…
எழுத்தும் சொல்லும்
வேகமாய் வளர்கையில்
கவிதைகள் மட்டும்
காணாமல் போவதேன்

வாழ்க்கைப் பூக்களில்
வண்டுகள் உறிஞ்சிக்
காலம் காலமாய்க்
கட்டிய தேனடைகவிதைத் தேனாய்
நிரம்பி வழிகையில்
சிந்திய சிலதுளி
நெஞ்சம் நிறைந்து
நினைவில் இனிக்கிறது.

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும் - கவிதை

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்

மலையருவி


ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

செத்தவன் குடல்உருவி
செங்காவி உடையுடுத்து
எத்திசையும் மதப்பேய்கள்
எக்காளம் இடுகிறதே!

ரத்தத்தில் முகம்கழுவி
ரதங்களிலே யாத்திரையாய்
யுத்தத்தை மிகவேண்டி
ருத்திரமாய் வருகிறதே!

அந்த மதப்பேய்கள்
அண்டாமல் தடுத்துவிடு
முந்தி நீயிருந்து
மோதி அழித்துவிடு

அயோத்தி தெருக்களிலே-அது
ஆடிய ஆட்டத்தால்
அய்யோ நாம் படும்
துன்பம் அளவிட முடியாதே

குஜராத் தெருக்களிலே-இப்போ
குடியிருக்கும் சேதிகேட்டேன்
நிஜமாகச் சிலநாளில்
நம்மூர்க்கும் வந்திடலாம்

அப்போது அப்பேய்கள்
ஆர்ப்பாட்டம் தாங்காது
இப்போதே புறப்பட்டால்
இல்லாம செஞ்சிடலாம்

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

மதமான பேய்களையே
மயானத்துக்கு ஓட்டிவிடு
பதமாக அதையடக்கிப்
படுகுழிக்குத் தள்ளிவிடு

வேறுசில மதப்பேய்கள்
வெடிகுண்டு கையெடுத்து
சேறுபடும் ரத்தத்தில்
சந்தோஷப் படுகிறதே

பச்சை மதப்பேய்கள்
பம்பாய் கோவையென
உச்ச வெறிபிடித்து
ஊரை அழிக்கிறதே

கோவிலுக்குள் நுழைந்து
அப்பாவி மக்களின்
ஆவிகளைப் பறித்து
அஞ்சிடச் செய்கிறதே

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

எல்லா மதப்பேய்களையும்
எரிவிழியால் அழித்துவிடு
பொல்லாத பேய்களைப்
பொசுக்கியே சாம்பலாக்கு

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

இரத்தவெறி வேண்டாம்-அம்மா
யுத்தவெறி வேண்டாம்
குண்டுகள் வேண்டாம்-அம்மா
சூலங்களும் வேண்டாம்

மதம் வேண்டாம் தாயே- எங்களை
மனுஷங்களா வாழவிடு
ஆயதங்கள் வேண்டாம் தாயே-எங்களை
அன்போடு வாழவிடு.