Friday, December 17, 2010

கவிதையும் குழந்தையும் -மலையருவி

எழுதிய கவிதையை
என்ன செய்வது?

படித்துப் படித்துப் பார்த்தேன்
நிறைவில்லை..

நண்பரிடம் காட்டினேன்
நன்றாக வந்திருக்கிறது என்றார்.

பலரும்
ஆர்வத்தில் வாங்கி..!

வாசித்தார்கள் என நினைக்கிறேன்.

புரியலையே! என்றார் ஒருவர்
ஆரம்பிச்சிட்டீங்களா? இது இன்னொருவர்
ஒன்றும் சொல்லாமல்
கோபப் பார்வையுடன் மற்றொருவர்
அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்

ஏன் காட்டினோம் என்றிருந்தது

படம் வரையப்போறேன்
என்றிழுத்தவாறே
கவிதையின்
பின்பக்க வெள்ளைத் தாளில்
குதூகலத்துடன்
வரையத் தொடங்கியது.
குழந்தையொன்று.

இறுகியமனசு
இலேசானது.