Saturday, November 23, 2019

கூட்டணி தர்மம்

-மலையருவி


நாய் வேடம்
புனைந்த சுகத்தில்
குரைக்க குரைக்க
வால் வளரும் அதிசயம்

"பித்தளைச் சட்டி"

முனைவர் நா.இளங்கோ (மலையருவி)

அடர்ந்த இருட்டில்
பின்னிரவுப் பொழுதுகளில்
அசந்த உறக்கத்தில்
தட்டு முட்டுச் சாமான்கள்
களவாடப் பட்டதென்றால்
கலங்கி நிற்கப் போவதில்லை
கவனத்தை நிலைப்படுத்தி
கண்ணுறக்கம் குறைத்து
காவலை முடுக்கலாம்

ஆனால்,
நடந்த விந்தையை
நானறியா அனுபவத்தை
எப்படி எடுத்துரைப்பேன்

அன்றைக்குக்
காலை விழித்தெழுந்து
விரல்வைத்துப் பல்தேய்க்க
சாம்பலைத் தேடி
புழக்கடைக்குப் போகையிலே
புதுசா ஒரு சட்டி
பொன்னிறத்தில் மின்னியது
தங்கமில்ல.. பித்தளைதான்
நம்ப வீட்டுப் பொருளில்லை
தொலைச்சவரோ
போட்டவரோ
யார் என்று தெரிந்துகொள்ள
திசை நாலும் நானலைந்தேன்
ஆளரவம் கேட்கவில்லை
ஆள் ஒண்ணும் தென்படல

பாத்திரத்தை எடுத்து
உள்ளே வைக்க ஒப்பவில்லை
அடுத்தவங்கப் பொருளெதுக்கு!
பித்தளை சட்டி
நம் வீட்டுக்குப் பொருந்தாத
புதுப் பொருளாய் நெருடியது

இராத்திரியும் பகல்பொழுதும்
தூக்கம் பிடிக்கவில்லை
நிம்மதி மனசில் இல்லை
மாதங்கள் கடந்து
ஆண்டுகள் உருண்டன.

இந்தப் பொழுது
இப்படியா விடியனும்?

திபுதிபுவென யார்யாரோ
என் வீட்டின் உள்நுழைந்தார்
வீட்டுப் பொருளையெல்லாம்
தலைகீழாய்க்
கொட்டிக் கவிழ்த்தார்கள்
ஓ’ என்று ஓயாத பேரிரைச்சல்
எதையோ தேடினார்கள்

கூட்டத்தில் ஒருவன்
உற்சாகக் கூச்சலிட்டான்
அதோ இருக்கிறது!
அதோ இருக்கிறது!!
நாம் தேடிவந்த பித்தளை சட்டி

வந்தவர்கள் தேடியது
அதைதான் எனத் தெரிந்துகொண்டேன்.

அது என்னுடையதில்லை
நீங்கள் எடுத்துச் செல்லலாம்
பணிவோடு விடைகொடுத்தேன்.

கோபத்தோடு ஒருவன்
பின்மண்டையில் தட்டினான்
பலரும் தொடர்ந்தனர்
எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்
இது எங்கள் சட்டி
எங்கள் வீட்டுச் சட்டி

இந்தப் பித்தளை சட்டி
இப்போ இங்கே இருப்பதால்
இதுதான் எங்கள் வீடு
இதுதான் எங்கள் வீடு
அன்னியனே வெளியே போ
அன்னியனே வெளியே போ