Monday, July 1, 2013

கால்களும் காலங்களும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


வாகனங்கள்
பெருகியோடும்
நெடுஞ்சாலைகளில்
தடம்மாறாமல்
கைகளும் மனதும் சலிக்க..
துச்சாதனன் கைச்சேலையாய்ச்
சாலைகளை உரித்தபடி
தொடரும் பயணங்கள்
என்னை வெறுப்பேற்றும்

பாம்பாய் நெளியும்
ஒற்றையடிப் பாதைகளில்
விழிகள் மேய
வானை முத்தமிட்டுப்
பாதைகள் துழாவி
மேய்ந்து திரியும்
பயணங்கள்
என்னை ஆரத்தழுவும்

தேய்ந்து வெளுத்தப்
பாதைகளின் இடையே
விழி காட்டும்
வழி திரும்ப..
நெருஞ்சி விரிப்பில்
கால்கள்
புதுப்புதுப் பாதைகள் சமைக்க
சிலுவைகள் சுமக்கும்

கால்கள் கிழித்த
மண்ணின் வடுக்கள்
இனிவரும் பாதங்களுக்குப்
பல்லக்குகள் சுமக்க
வழிமேல் விழி புதைக்கும்
பாதைகளின் பயணத்தில்
நடப்பன
கால்கள் மட்டுமல்ல
காலங்களும்.