Sunday, March 8, 2020

கங்குகள் உயிர்க்கும்

மலையருவி


கல்லெறி, தீ வைப்பு
வன்முறை வெறியாட்டம்.
கையில் தடி
கண்களில் கொலைவெறி
மறைத்த முகங்களின்
முகவரி தொலையும்

ஆயுதம் எடுத்தவர்க்கும்
ஆயுதம் கொடுத்தவர்க்கும்
அதே ஆயுதம்தான்.

இரத்தப் பூஜையும்
பிணப் படையலும்
சாமிக்காகவா!

எதிர்க்குரல் கேட்கக்
கூசும் செவிகளை
முழக்கப் பேரொலி
ஈட்டியாய்ப் பிளக்கும்

எரியும் தீயடங்கி
பூக்கும் சாம்பலில்
கங்குகள் உயிர்க்கும்

-மலையருவி


கடைசி நம்பிக்கை

மலையருவி


அவன், உன்னை வெட்டினாலும்
நீ, அவனை வெட்டினாலும்
அவர்கள் 
தமக்குள்ளே வெட்டி மடிந்தாலும்
நீங்கள்
உங்களுக்குள்ளே வெட்டி வீழ்ந்தாலும்

நமக்காக
அழுது அரற்றிக்
கண்ணீர் சிந்திக்
காக்கத் துடிப்பன
மனித மனங்களே!

மனிதர்களே!
ஒருபோதும்
மனிதத்தை வெட்டி
வீழ்த்தி விடாதீர்கள்!

நமது
கடைசி நம்பிக்கை
மனிதம்தான்.

-மலையருவி