Sunday, December 8, 2019

ஆதிக்கச் சுவரை இடி

முனைவர் நா.இளங்கோ



இடி
ஆதிக்கச் சுவரை இடி
அடித்தளம் அற்றுப் போக
உடைத்து இடி..

உடை,
மனுநீதியின்
ஒவ்வொரு கல்லையும்
உடை..

உடைத்து நொறுக்கு
சனாதன தர்மம்
தூள் தூளாகும் வரை
உடைத்து நொறுக்கு

அழி
அடையாளம்
அற்றுப் போகும்வரை அழி
முற்றாக அழி
சாதிபேத அநீதிகளை அழி

விழி
சமத்துவ உலகம் காண விழி.


-மலையருவி

இரத்தச் சிவப்பில் தாமரை

முனைவர் நா.இளங்கோ


குருதிச் சேற்றில்
குதித்துக் குளித்து
சேறுவழித்து...
கண்கள் சிவக்க
வீறுநடை,

கையில்
இரத்தச் சிவப்பில்
சொட்டும் ஈரத்தோடு
தாமரைப் பூக்கள்.


-மலையருவி.

முப்புரி நூல்

முனைவர் நா.இளங்கோ



கல்விக்கு
நூலோடு தொடர்புண்டு,
அது முப்புரி நூல்
என்கிறது மனு()தர்மம்.

பாத்திமா லத்தீப்பின்
தூக்குக் கயிற்றில்
எத்தனை எத்தனை
முப்புரி நூல்களோ?

காலம் காலமாய்த் திரிக்கப்பட்டு
இறுகி கனத்து
இன்னும்
எத்தனை உயிர் வாங்கக்
காத்திருக்கின்றனவோ!

நூல்.. நூல்.. நூல்..

- மலையருவி.

நறுக்குகள் -2

முனைவர் நா.இளங்கோ



கண்ணாடியில் காணும்
தன் பிம்பத்தை
இடைவிடாது
கொத்தித் துரத்தும்
குருவிகளாய் நாம்.


- மலையருவி.









கம்பளிப் புழுவின்
கடுந்தவம் வெற்றி!
வண்ணத்துப் பூச்சி.

-மலையருவி










நீளும் ஒற்றையடிப் பாதையில்
எதிர்ப்படுவோர் எல்லாம்
நானாக இருக்கையில்
யாரை நோக்கி நீளும்
என் சுட்டுவிரல்!

- மலையருவி.











கழுதைகளோடு என்ன சகவாசம்
குதிரைகளுக்கு?
எனப் புலம்பித் தவித்து
உற்றுப் பார்த்ததில்
எல்லாமே கழுதைகள்தாம்!

-மலையருவி

நறுக்குகள் -1

முனைவர் நா.இளங்கோ





சுமக்கையில்
சுமை தெரிவதில்லை
சுமக்கும் சுகத்தில்

-மலையருவி
















பதுக்கவில்லை
சேமிக்கின்றன
எறும்புகள்.

- மலையருவி










வழவழப்பிலும் மினுமினுப்பிலும்

தெரிகின்றன
கூழாங்கற்களின்
வலிகளும் இரணங்களும்.

- மலையருவி.











மிருதுவான மேனியைத்
தடவி வருடும்
கைகளுக்குத் தெரியாது,
பூனைகளிள்
கொடூரப் பற்களும்
கூரிய நகங்களும்.

- மலையருவி.






Saturday, November 23, 2019

கூட்டணி தர்மம்

-மலையருவி


நாய் வேடம்
புனைந்த சுகத்தில்
குரைக்க குரைக்க
வால் வளரும் அதிசயம்

"பித்தளைச் சட்டி"

முனைவர் நா.இளங்கோ (மலையருவி)

அடர்ந்த இருட்டில்
பின்னிரவுப் பொழுதுகளில்
அசந்த உறக்கத்தில்
தட்டு முட்டுச் சாமான்கள்
களவாடப் பட்டதென்றால்
கலங்கி நிற்கப் போவதில்லை
கவனத்தை நிலைப்படுத்தி
கண்ணுறக்கம் குறைத்து
காவலை முடுக்கலாம்

ஆனால்,
நடந்த விந்தையை
நானறியா அனுபவத்தை
எப்படி எடுத்துரைப்பேன்

அன்றைக்குக்
காலை விழித்தெழுந்து
விரல்வைத்துப் பல்தேய்க்க
சாம்பலைத் தேடி
புழக்கடைக்குப் போகையிலே
புதுசா ஒரு சட்டி
பொன்னிறத்தில் மின்னியது
தங்கமில்ல.. பித்தளைதான்
நம்ப வீட்டுப் பொருளில்லை
தொலைச்சவரோ
போட்டவரோ
யார் என்று தெரிந்துகொள்ள
திசை நாலும் நானலைந்தேன்
ஆளரவம் கேட்கவில்லை
ஆள் ஒண்ணும் தென்படல

பாத்திரத்தை எடுத்து
உள்ளே வைக்க ஒப்பவில்லை
அடுத்தவங்கப் பொருளெதுக்கு!
பித்தளை சட்டி
நம் வீட்டுக்குப் பொருந்தாத
புதுப் பொருளாய் நெருடியது

இராத்திரியும் பகல்பொழுதும்
தூக்கம் பிடிக்கவில்லை
நிம்மதி மனசில் இல்லை
மாதங்கள் கடந்து
ஆண்டுகள் உருண்டன.

இந்தப் பொழுது
இப்படியா விடியனும்?

திபுதிபுவென யார்யாரோ
என் வீட்டின் உள்நுழைந்தார்
வீட்டுப் பொருளையெல்லாம்
தலைகீழாய்க்
கொட்டிக் கவிழ்த்தார்கள்
ஓ’ என்று ஓயாத பேரிரைச்சல்
எதையோ தேடினார்கள்

கூட்டத்தில் ஒருவன்
உற்சாகக் கூச்சலிட்டான்
அதோ இருக்கிறது!
அதோ இருக்கிறது!!
நாம் தேடிவந்த பித்தளை சட்டி

வந்தவர்கள் தேடியது
அதைதான் எனத் தெரிந்துகொண்டேன்.

அது என்னுடையதில்லை
நீங்கள் எடுத்துச் செல்லலாம்
பணிவோடு விடைகொடுத்தேன்.

கோபத்தோடு ஒருவன்
பின்மண்டையில் தட்டினான்
பலரும் தொடர்ந்தனர்
எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்
இது எங்கள் சட்டி
எங்கள் வீட்டுச் சட்டி

இந்தப் பித்தளை சட்டி
இப்போ இங்கே இருப்பதால்
இதுதான் எங்கள் வீடு
இதுதான் எங்கள் வீடு
அன்னியனே வெளியே போ
அன்னியனே வெளியே போ

Thursday, June 13, 2019

உள்ளங்கையில் சிக்கிய மேகம்

-முனைவர் நா.இளங்கோ



குவித்து மூடிய
கைகளுக்கு இடையே
சிக்கிய மேகத்தை
எப்படிப் பார்ப்பது?

இலேசாகக்
கைகளைப் பிரிக்கவும்
அச்சம்.
இடைவெளியில்
மேகம் நழுவிவிடக் கூடும்

விரல் இடுக்குகளில்
மேகம் கசிந்து விடாதிருக்க
இறுகப் பற்றிய
விரல்கள் நடுங்கின

கைகளுக்குள்ளே
கருவரைச் சிசுவாய்
மடங்கிச் சுருண்டிருக்கும்
மேகத்தைப் பார்க்க
மனசு துடித்தது

விரல்களை விலக்கினால்..
கைகளைப் பிரித்தால்..
உள்ளங் கைக்குள்
சிறைபட்டிருக்கும்
மேகப்பறவை
விருட்டென்று சிறகடித்து
விரைந்து பறக்கலாம்

நடுங்கிய விரல்கள்
நாழிகை கடக்கையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மரக்கத் தொடங்கின

கைச்சிறைக்குள்
சிக்கிய மேகத்தை
என்ன செய்வது?

ஒருமுறை
ஒரே ஒருமுறையாவது
கண்ணாரக் காணாமல்
கைப் பிடிக்குள்
கட்டுண்ட மேகத்தைக்
கனவில் கண்டா
களிப்புறுவது.

காலம் கடக்க
காலம் கடக்க
மேகம் மறந்தது
கைகள் கனத்தன

கனத்த விரல்களை
மெல்லத் திறந்தேன்
ஆகாயத்தில்
மேகத்திரட்சி

உள்ளங்கையில்..?

Tuesday, June 4, 2019

காதல் வரமா? - காதலர் தின சிறப்புக் கவிதை

-முனைவர் நா.இளங்கோ




வாழ்க்கைப் பாதையின்
மேடு பள்ளங்களில்
சலியாத பயணம்…
இலக்கற்றுத் தொடங்கும்
ஒவ்வொரு பயணமும்
வெற்றியில் முடியும்

வாழ்க்கைப் பயணத்தில்
அலுப்புறும் போதெல்லாம்
சக பயணிகளோடு
நேசக்கரம் நீளுமந்த
ஒவ்வொரு கணத்திலும்
காதல் மலரும்

நீளும் கரங்களை
நிராகரிப்பதும் நேசிப்பதும்
அவரவர் விருப்பம்
ஒருகை விலக்கினால்
ஒருகை உறவுறும்

உள்ளம் உருக
உன் கரங்களைப் பற்றும்
அந்தக் கைகளைத்
தேடும்பயணத்தில்
உதாசீனப் படுத்தியக்
கரங்களை மறந்துவிடு

அழுந்தப் பற்றும்
அன்புப் பிடியில்
என்பு உருகும்
ஏக்கம் தொலையும்

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை
உயிர்ப்பின் அடையாளம்

மகரந்தச் சேர்க்கைகள்
இல்லாமல்
காய் ஏது? கனி ஏது?

உயிர்ப்பின் உன்னதம்
காதலின் இலட்சியம்

உள்ளத்தில் தொடங்கி
உடம்பில் முடிவதும்
உடம்பில் தொடங்கி
உள்ளத்தில் முடிவதும்
இரண்டும் காதல்தான்

மனுதர்மம் பேசி
சாதிப் பதாகைகள் ஏந்தி
சில கழுகுகள்
வானில்
வட்டமிடத் தொடங்கிவிட்டன

செத்த எலிதொடங்கி
நரமாமிசம் வரைக்
குத்திக் கிழிக்கும்
கொலைகாரக் கழுகுகளுக்கு
குழந்தைகளைக்
கொஞ்சத் தெரியுமா?

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை

உயிர்ப்பின் அடையாளம்

-மலையருவி-

கூடிப் பொங்கல் வைப்போம் - பொங்கல் கவிதை

முனைவர் நா.இளங்கோ




பழைய நினைவுகளின்
உசலாட்டத்தில்
உயிர் வாழ்க்கை
ஒட்டிய வயிற்றோடு

பசுமைப் போர்த்திய
பரந்த வயல்வெளி,
ததும்பி வழியும் வரப்புகளில்
துள்ளிக் குதிக்கும் கெண்டை,
வரப்பு வளைகளில்
எட்டிப் பார்த்து
கண்ணாம்பூச்சி விளையாடும்
சேற்று நண்டுகள்

நினைவுகளை
அசைபோட்டு அசைபோட்டு
வழியும் இரத்தத் துளிகளில்
விழித்தெழுகிறோம்

புதுப்பானை
கரும்பு மஞ்சள்
புத்தரிசிப் பொங்கல்
கனாக்கண்டு விழித்தெழுகையில்
வெடித்துப் பிளந்த
நஞ்செய் வயல்களாய்
நெஞ்சு வெடித்து
விவசாயி

மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடித்த
களத்து மேடுகளில்
சிதறிய
நித்தியக் கல்யாணிகளோடு
உழவனின் கனவுகள்

ஏறு தழுவிய தோள்கள்
ஏந்திய கைகளாகும்
சோகத்தில்
எதிர்காலம் வினாக்குறிகளோடு

சூலமேந்தி
பொய்மூட்டைகளைச் சுமந்து
விடாமல் துரத்தும்
தேசபக்தர்களின்
பலிபீடத்தில்
மண்டியிட்டு
தலைகுனிந்து நிற்கிறது
தேசம்..

நேற்றைய நினைவுகளின்
உற்சாகத்தில்
இன்றைய
வலிகளைக் கடந்து
நாளைய விடியலை
எதிர்நோக்குவோம்..

வியர்வைகளின் தேசமே!
இன்றைய உலைகளில்
நாம்
நம்பிக்கை நீர்ஊற்றி
விழிப்பின் நெருப்பினிலே
மக்கள் சக்தியெனும்
மகத்தான
பொங்கல் வைப்போம்
கூடிப் பொங்கல் வைப்போம்
குதூகலப் பொங்கல் வைப்போம்


                  -மலையருவி