Sunday, February 24, 2013

முகமற்றவளின் சிணுங்கல்

-மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)


கவிஞர் மலையருவி

நள்ளிரவைத் தவிர?
நாளின் எந்த நேரமும்
கழிப்பறை, குளியலறை
உண்ணும் இடம், பயணப் பாதை,
அலுவலகம், ஆலயம்
இடம் எதுவாயினும்
அவளின் சிறப்புக் கவனம்
உங்களை நோக்கியே..

பிடித்த நடிகரின்
திரைப்படத் தகவல்,
பாடல்கள்,
ரிங்டோன்,
காலர் டியூன்
வேண்டுமா!

பணத்தேவையா!
வீடு கட்ட, கார் வாங்கக்
கடன் ஆலோசனை வேண்டுமா!

உங்கள் சுகதுக்கங்களை
மனம்விட்டுப் பேச,
திறந்த மனதுடன் கேட்க
ஒரு சிநேகிதி வேண்டுமா!
எப்பொழுதும் தயார்..

இன்றைய இயந்திர உலகில்
உங்களுக்காகக் கவலைப்பட,
ஆலோசனை கூற,
வார்த்தையில் உதவ
ஒருத்தி!

அந்த முகமற்றவளின்
சிணுங்கல் குரல்
நெருக்கத்தில்
உங்கள் காது மடல்களைத்
தழுவியபடி..

காற்றில் மிதந்து
கைபேசி வழியாய்
உங்கள் காதுகளுக்கு
விருந்தளிக்கும்
அந்த முகமற்றவளுக்கு
உங்கள் நன்றியைத் தெரிவிக்க..

ஒரே வழி
நிறைய ரீசார்ஜ் செய்யுங்கள்
உங்கள் கைபேசியின்
கையிருப்பு எப்பொழுதும்
நிரம்பி வழியட்டும்

அவள் அதைத்தான் சுவாசிக்கிறாள்.