Monday, June 1, 2020

நாடெங்கும் தேரைகள்…

-மலையருவி

 



எங்கள் வீட்டுக்

குளியலறை ஜன்னலில்

ஒரு தேரை.

சில மாதங்களாக

ஒரே இடத்தில்..

 

இடம் பெயர்வதில்லை

ஒலி எழுப்புவதில்லை..

ஆனால்

உயிரோடுதான் இருக்கிறது.

 

எப்பொழுதாவது

கொஞ்சம் இடப்பக்கமோ

கொஞ்சம் வலப்பக்கமோ

அசையும்

உயிரோடுதான் இருக்கிறேன்

என்பதைக் காட்ட

 

எப்பொழுது உணவு

எப்பொழுது தண்ணீர்

உயிர் வாழ்க்கை எப்படி?

புரியாத புதிர்..

 

இடி மின்னலோடு

சுழன்றடிக்கும் சூறாவளி

கொட்டும் மழை

கொளுத்தும் வெயில்

எதற்கும்

அசைந்து கொடுக்காத

தேரை..

 

யார் வாழ்கிறார்

யார் சாகிறார்

பூமி குளிர்கிறதா

தீயில் வேகிறதா

சலனமில்லா

சஞ்சலமில்லா

மோன தவத்தில்

தேரை..

 

குளியலறையில்

மட்டுமல்ல

வீட்டின்

உள்ளேயும் வெளியேயும்

நகரமெங்கும்

நாற்றிசையிலும்

நாடெங்கிலும்

தேரைகள்..

தேரைகள்..

 

வாழும் களத்தில்

இருக்கும் இடத்தில்

கண்ணுக்கெதிரே

எது நடந்தாலும்

யாருக்கு நடந்தாலும்

அசைந்து கொடுக்காத

தேரைகள்

 

புத்தகம் தின்று

பட்டங்கள் செரித்து

மூளை வீங்கிக் கிடக்கும்

தேரைகள்

நாடெங்கிலும்

நடுவீட்டிலும்..


நடக்கிறோம்.. நடக்கிறோம்..


-மலையருவி

நடக்கிறோம்
நானும் என் குடும்பமும்..
நடக்கிறோம்
நானும் சக தோழர்களும்..

தேசத்தின்
குறுக்கும் நெடுக்குமாக
தெற்கிலிருந்து வடக்காக
மேற்கிலிருந்து கிழக்காக
தேசம் எவ்வளவு பெரிது

தலைச்சுமையால்
கழுத்து நெரிய
மூட்டை முடிச்சுகளால்
முதுகு நெளிய
நடக்கிறோம்.. நடக்கிறோம்
வலசை போன
பறவைகளாய்த்
தாய் மண் தேடி..

பஞ்சம் பழைக்கப் போய்
பாதிவழி மீள்கிறோம்
பீச்சியடிக்கும்
கிருமி நாசினிக்
குழாய்களில் குளித்து
லத்தி யடிகளில்
உடல் திமிறி
எல்லையற்று நீளும்
தார்ச்சாலைகளில்
தடம் தேய
நடக்கிறோம்..
நடக்கிறோம்..

சாலை விபத்துகளில்
ரயில் தண்டவாளங்களில்
பசி மயக்கத்தில்
செத்து வீழ்ந்தவர்களைச்
சுமக்க முடியாத
நடைப் பிணங்களாய்..

கொளுத்தும்
கோடை வெயில் குளித்து
வீசும் புழுதி
மண் பூசி
தாகம் தணிக்க
நீரின்றி
வயிற்றுப் பசிக்குச்
சோறின்றி
நடக்கிறோம்..
நடக்கிறோம்..

தேசமெங்கும்
தார்ச் சாலைகள்
எங்கள் ஊரிலும்
இதே தார்ச் சாலை
நடப்போம்
நடப்போம்

கால்நடையாய்..
நடந்து நடந்துக்
கால்கள் தேய்ந்தாலும்
சுமந்துச் சிவந்த
கைவிரல்களுக்குச்
சேதமில்லை..
தேர்தலன்று
மை வைக்க
விரல் வேண்டுமே!