Thursday, May 19, 2011

சுயதொழில் நாட்டை உயர்த்தும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




அழைப்பு மணி
மெல்லச் சிணுங்க
கதவு திறந்து
தயக்கங்களோடு
தலைநீட்டியு போது

ஷுவும் டையுமாய்
டக்செய்த மிடுக்கோடு
இளைஞனொருவன்

ஒரு கையில்
உள்ளதை மறைக்க
பின்னால் மடக்கி
தத்துபித்தென்று
தமிழான ஆங்கிலத்தில்
ஏதோ ஒன்றை
விற்கத் துடித்தான்

வாங்கித் தீரவேண்டும்
என்ற அவசியமில்லையாம்
சும்மா
டெமோ பார்த்தால்
போதுமென்றான்

சமாளித்து அனுப்பிவிட்டு
கதவு சார்த்தித் திரும்ப,

மீண்டும்
அழைப்பு மணி
இளம் பெண்ணொருத்தி
களைத்த முகத்தோடும் குரலோடும்
புதுக் கம்பெனி
விளம்பரத்திற்காய்
எனச் சொல்லி
ஏதேதோ எடுத்து நீட்டி
இலவசங்களோடு
விற்பனை என்றாள்.

சலித்துத் தட்டிக் கழித்து
விரைந்து தாழ் அடைத்து
உள் நுழைய,

மீண்டும்
அழைப்பு மணி..
சிடுசிடுத்த முகத்தோடு
படீரெனக் கதவு திறக்க
நரைக் கிழவரொருவர்

ஊறுகாய் வடாம் வத்தல்
பாக்கெட்டுகளோடு
வழியும் வியர்வை துடைத்து
தடுமாறும் கரம் நீட்டி
வார்த்தைகளைக் குதப்ப

ச்சே!
முகத்திலும் குரலிலுமாய்
எரிச்சல் காட்டி
விரட்டிக் களைத்து,

காலிங்பெல் நிறுத்தி
கதவை உள்தாழிட்டு

பதட்டம் தணிய
ஆசுவாசப் படுத்தும் முயற்சியில்

இன்றைய செய்தித்தாள் புரட்ட
கண்ணில் பட்டது.
நேற்று
ஓர் அரசு விழாவில்
பேசிய என்பேச்சு

அரசாங்க வேலை..
அரசாங்க வேலை..
என்றில்லாமல்
சுயதொழில் செய்து
எல்லோரும்
நாட்டை உயர்த்தணும்.