Saturday, October 3, 2009

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மலையருவி

ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!

போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை

மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்

இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!

நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!

உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!

மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!