Tuesday, June 4, 2019

காதல் வரமா? - காதலர் தின சிறப்புக் கவிதை

-முனைவர் நா.இளங்கோ




வாழ்க்கைப் பாதையின்
மேடு பள்ளங்களில்
சலியாத பயணம்…
இலக்கற்றுத் தொடங்கும்
ஒவ்வொரு பயணமும்
வெற்றியில் முடியும்

வாழ்க்கைப் பயணத்தில்
அலுப்புறும் போதெல்லாம்
சக பயணிகளோடு
நேசக்கரம் நீளுமந்த
ஒவ்வொரு கணத்திலும்
காதல் மலரும்

நீளும் கரங்களை
நிராகரிப்பதும் நேசிப்பதும்
அவரவர் விருப்பம்
ஒருகை விலக்கினால்
ஒருகை உறவுறும்

உள்ளம் உருக
உன் கரங்களைப் பற்றும்
அந்தக் கைகளைத்
தேடும்பயணத்தில்
உதாசீனப் படுத்தியக்
கரங்களை மறந்துவிடு

அழுந்தப் பற்றும்
அன்புப் பிடியில்
என்பு உருகும்
ஏக்கம் தொலையும்

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை
உயிர்ப்பின் அடையாளம்

மகரந்தச் சேர்க்கைகள்
இல்லாமல்
காய் ஏது? கனி ஏது?

உயிர்ப்பின் உன்னதம்
காதலின் இலட்சியம்

உள்ளத்தில் தொடங்கி
உடம்பில் முடிவதும்
உடம்பில் தொடங்கி
உள்ளத்தில் முடிவதும்
இரண்டும் காதல்தான்

மனுதர்மம் பேசி
சாதிப் பதாகைகள் ஏந்தி
சில கழுகுகள்
வானில்
வட்டமிடத் தொடங்கிவிட்டன

செத்த எலிதொடங்கி
நரமாமிசம் வரைக்
குத்திக் கிழிக்கும்
கொலைகாரக் கழுகுகளுக்கு
குழந்தைகளைக்
கொஞ்சத் தெரியுமா?

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை

உயிர்ப்பின் அடையாளம்

-மலையருவி-

கூடிப் பொங்கல் வைப்போம் - பொங்கல் கவிதை

முனைவர் நா.இளங்கோ




பழைய நினைவுகளின்
உசலாட்டத்தில்
உயிர் வாழ்க்கை
ஒட்டிய வயிற்றோடு

பசுமைப் போர்த்திய
பரந்த வயல்வெளி,
ததும்பி வழியும் வரப்புகளில்
துள்ளிக் குதிக்கும் கெண்டை,
வரப்பு வளைகளில்
எட்டிப் பார்த்து
கண்ணாம்பூச்சி விளையாடும்
சேற்று நண்டுகள்

நினைவுகளை
அசைபோட்டு அசைபோட்டு
வழியும் இரத்தத் துளிகளில்
விழித்தெழுகிறோம்

புதுப்பானை
கரும்பு மஞ்சள்
புத்தரிசிப் பொங்கல்
கனாக்கண்டு விழித்தெழுகையில்
வெடித்துப் பிளந்த
நஞ்செய் வயல்களாய்
நெஞ்சு வெடித்து
விவசாயி

மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடித்த
களத்து மேடுகளில்
சிதறிய
நித்தியக் கல்யாணிகளோடு
உழவனின் கனவுகள்

ஏறு தழுவிய தோள்கள்
ஏந்திய கைகளாகும்
சோகத்தில்
எதிர்காலம் வினாக்குறிகளோடு

சூலமேந்தி
பொய்மூட்டைகளைச் சுமந்து
விடாமல் துரத்தும்
தேசபக்தர்களின்
பலிபீடத்தில்
மண்டியிட்டு
தலைகுனிந்து நிற்கிறது
தேசம்..

நேற்றைய நினைவுகளின்
உற்சாகத்தில்
இன்றைய
வலிகளைக் கடந்து
நாளைய விடியலை
எதிர்நோக்குவோம்..

வியர்வைகளின் தேசமே!
இன்றைய உலைகளில்
நாம்
நம்பிக்கை நீர்ஊற்றி
விழிப்பின் நெருப்பினிலே
மக்கள் சக்தியெனும்
மகத்தான
பொங்கல் வைப்போம்
கூடிப் பொங்கல் வைப்போம்
குதூகலப் பொங்கல் வைப்போம்


                  -மலையருவி

Sunday, May 26, 2019

உழைக்கும் பெண்ணே!

முனைவர் நா.இளங்கோ




பெண்ணே!
கருத்து உடல்பெருத்து
முடிசிறுத்து
உழைத்த உடல் சோர்ந்து
சற்றே சாய்ந்து தளர்ந்தாயா!

நிமிர்ந்து உடல்மினுக்கும்
செவ்வகப் பெட்டியொன்று
அருகமர்ந்து ஆதரவாய்
அன்பொழுகப் பேசியது

குங்குமப் பூப்போனற
சிவப்பழகு வேண்டுமா?
ஒரே வாரத்தில்!
நீண்ட கருங்கூந்தல்
அலைபாய
வாகனங்களையே
கட்டிஇழுக்கும்
வலிமையாக கூந்தல் ரகசியம் சொல்லவா?
மெலிந்த தேகமும்
வசீகரிக்கும் முகமும்
வெய்யில் தூசு புழுதியில்
மாசடையாத
மேனி வேண்டுமா?

செவ்வகப் பெட்டி
அக்கறையோடு
அடுக்கடுக்காகத்
தன் பொய் மூட்டைகளை
திறந்து கொட்டியது

பெண்ணே!
ஆணை மயக்கத்தான் உன்மேனி
அழகு! கவர்ச்சி! வசீகரம்
இதுவே
வாழ்க்கையின் இலட்சியம்
ஆசைப்படு! ஆசைப்படு!
பூ! புடவை! நகை!
அத்தனைக்கும் ஆசைப்படு!

கிரீம்! லோஷன்! பாலீஷ்
நுகர்வுச் சந்தையில்
உன்னை நம்பித்தான்
இத்தனையும், இன்னமும்..
மாயப்பெட்டியின்
ஓயாத ஓலம்
தொடர்ந்துகொண்டே இருந்தது..

பெண்ணே!
உழைக்கும் பெண்ணே!
அந்த மாயப்பெட்டி
நீண்ட தொடர்களால்,
கண்ணீர் கசியும்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளால்
உன்னைக்
கட்டிப் போட்டதெல்லாம்
எதற்கென்று அறிவாயா!

விழித்தெழு!
ஆண்களில் சந்தையில்
நீ நுகர்பொருளல்ல!
பெண்களின்
நுகர்பொருளுக்கு
நீ சந்தையுமல்ல..

உன் மாயக் கனவுகளை
உதறி எறிந்துவிட்டு
புதுமைப் பெண்ணாக
உடனே கிளர்தெழு!
உழைக்கும் பெண்ணே!
உலகம் உன்கையில்..


      

Tuesday, May 21, 2019

முப்பாட்டன் வீடு - விடுதலைநாள் சிறப்புக் கவிதை

-மலையருவி

முனைவர் நா.இளங்கோ



சுதந்திரம் என்ற பெயரில்
வீடு கைமாறிய பொழுதில்…

முன்பு எப்பொழுதோ
சிலபொழுதுகளில்
அந்த வீட்டின்
கதவுகள்
திறக்கப்பட்டதாய்ச்
சில பெரியவர்கள்
தம் பழைய நினைவுகளைத்
தூசிதட்டிக்
கதை சொன்னதுண்டு.

கதவு,
அது
சுவரில்
அதிஅற்புதமாகத் தீட்டப்பட்ட
ஒரு ஓவியமாக இருக்கலாம்
என்றும் நாங்கள் நம்பியதுண்டு

எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு
இடையில் பல கைமாறி
இப்போது,
சுதந்திரம் என்ற பெயரில்
எங்களுக்கு,
என்றான சந்தோஷத்தில்
கதவைப் பற்றியோ
வீட்டைத் திறப்பதைப் பற்றியோ
நாங்கள் யோசிக்கவே இல்லை

கொண்டாட்டங்கள் எல்லாம்
வீட்டைச் சுற்றியே இருந்தன
வீட்டின் அழகும்
மூதாதையர் பெருமையுமே
எங்கள் முழுப் பேச்சாயிருந்தது.

முப்பாட்டன் வீட்டில்
கடந்த காலங்களில்
பலரும் சுருட்டியது போக
மீதமுள்ள பொக்கிஷங்கள்
மிதமிஞ்சிக் கிடந்தன

வீட்டுக்குள் நுழைய
எங்களைத் தவிர
பலருக்கும்
பலவழிகள் தெரிந்திருந்தன

உடைந்த ஜன்னல்கள் வழியாக
தோட்டத்துச் சுவர் ஏறிக்குதித்து
சிதைந்த மேற்கூரையின்
ஓடுகளைப் பிரித்து..
இவை போதாவென்று
உள்ளேயே
பல பழம் பெருச்சாளிகள்

காலக் கிரமத்தில்
கஜானாவும் காலியாச்சு
பொக்கிஷங்களும் கொள்ளை போச்சு

சாவி எங்கள் கைகளில்
பத்திரம் எங்கள் பெயர்களில்

ஒருமுறை கூட நாங்கள்
உள்நுழைந்ததில்லை
உள்நிறை வளங்களைக்
கண்டதே யில்லை

சமத்துவக் கதவின்
சாவி இருந்தும்
கதவைத் தேட
முயன்றது மில்லை
இருக்கும் கதவைக்
காணவுமில்லை

கதவையும் திறக்காமல்
களவையும் அறியாமல்
கண்முன்னே
எம் முப்பாட்டன் வீடு
கணந்தொறும் சிதைய,
கதவுதிறக்கும் கணங்களுக்கான
விழிப்பைத் தேடுகின்றன
விழிகள் விரக்திகளோடு..




Monday, May 20, 2019

எல்லையில்லாத் தெய்வமே! சாவாய்! சாவாய்!

ஆசிபா பாலியல் படுகொலை


மலையருவி
முனைவர் நா.இளங்கோ



இருட்டுக் கருவறைக்குள்
இறுகிய முகம்காட்டும்
முரட்டுக் கடவுளே!
முகமறியாச் சிறுமியின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?
இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

படையல் பார்த்திருப்பாய்
பலகாரம் பார்த்திருப்பாய்
குருதிக் கொப்பளிக்க
உயர்ப்பலிகள் பார்த்திருப்பாய்

பக்திப் பரவசத்தில்
தன்தலையைத் துண்டாடிக்
காணிக்கை வைத்த அந்த
நவகண்டம் பார்த்திருப்பாய்

நாலைந்து மதவெறியர்
நாட்கணக்கில் வைத்திருந்து..
சிறுமி ஒருத்தியின்
சீரழிக்கப் பார்த்தாயே!
உறுப்புச் சிதைந்து
உடைப்பெடுத்த செங்குருதி
உன் உதட்டில் தெறிக்கலையா?
இல்லை.. இதுஎன்ன புதுப்படையல்
என்றே மயங்கினையோ

கடவுளர் பெயராலே
காமவெறிக் களியாட்டம்
பிஞ்சுக் குழந்தையின்
கதறல் கேட்கலையா?
கண்களும் குருடாச்சா?

ஊதுவத்தி சாம்பிராணி
எல்லாமும் பிணவாடை
எடுத்த வைத்த குங்குமத்தில்
இரத்தம் கசிகிறது

குதிரை மேய்த்திருந்த
குழந்தை உடல்சிதைந்து
படையல் வைத்தவர்கள்
பாதகத்தை ஏற்பாயா?

பழியறியாச் சிறுமிஉடல்
சிதைந்து உருக்குலைய
சீறிச் சினந்தெழுந்து
சின்னவளைக் காக்காமல்

சிலையாய் அமர்ந்திருந்து
சிறுமையினை ஏற்றாயா?
கையிலுள்ள ஆயதங்கள்
முனைமழுங்கிப் போயினவா?

சூலம் கொடியெடுத்து
தேவி பக்தர்களும்
தேசத்தின் பக்தர்களும்
சாதி மதங்கடந்த
நல்லிணக்கத் தோழர்களைச்
சாய்த்திடப் பார்க்கின்றார்
சவக்குழிக்கு அனுப்புகின்றார்

எல்லாம் அறிந்தவளே!
எல்லையில்லாத் தெய்வமே
மதவெறி மாயத்து
மனிதம் காப்பாயா?

இரத்தப் படையலும்
கன்னியின் குருதியும்
காமக்களிப்புமே உன்னை!
களிப்படையச் செய்யுமென்றால்

எல்லையில்லாத் தெய்வமே!
நீ போவாய்! போவாய்!!
இருந்திடிலோ இவ்வுலகில்
சாயாய்! சாவாய்!

வாழ்நாள் போராளி இரா.அழகிரி

முனைவர் நா.இளங்கோ
மலையருவி
16-05-2018




வாழ்நாள் போராளியே! –எங்கள்
அழகிரி அண்ணாவே!
கைகோர்த்துக் கடந்துவந்தோம்!
களத்தில்
கண்ணாகப் பின்தொடர்ந்தோம்! – எம்மைக்
கைவிட்டுச் சென்றீரே! –நாளும்
கலங்கியழச் செய்தீரே

அண்ணா அழகிரியே! -உம்
போராட்ட வாழ்க்கை கண்டோம்! –
உமக்கு வாழ்க்கையே போராட்டம்
என அறியோமே!

நாடு நலம் பெற
வீடு வளம் பெற
நாளும் குரல் கொடுத்தாய்!
பிறர் நாளும் மகிழ்ந்திட
மனத் துயரக் கடலினில்
என்றும் நீ கரைந்தாய்!

வீதியில் இறங்கிப் போராடுவோம்
விழிகள் கனல முழக்கமிடுவோம்
வியர்வை சிந்தக் குரல் உயர்த்துவோம்! -தமிழ்
மொழி இனம் நாடு காக்க
அணி திரட்டுவோம்
அண்ணலாரின் அகிம்சை வழியில்
படை நடத்துவோம்

படை நடத்தும் போதிலெல்லாம்
பார்க்கத் தவறினோம் –உம்
மனக்குமுறல் முகவாட்டம்
மதிக்கத் தவறினோம்

தோழமையின் கொடிபிடித்து
கொள்கை முழக்கினோம்
இழந்த உரிமை மீட்டெடுக்க
என்றும் அஞ்சிடோம்
இருக்கின்ற மக்கள்நலம்
காக்கக் கோரினோம்
இன்னல்களில் நீ தவித்த
தவிப்பைக் கண்டிலோம்.

காசு பணம் பார்க்காமல்
கடமை செய்தாயே!
கண்ணை மூடும்
நாள்வரைக்கும்
களத்தில் நின்றாயே!

உம்மைப்
பணம் கொடுத்து விலைக்கு வாங்க
பலர் முயன்றாரே!
நீதான்
பல்லிளிக்கும் பணப் பேயை
விரட்டி விட்டாயே!
அண்ணா! விரட்டி விட்டாயே!

உத்தமன் நீ! சத்தியம் நீ!

உலகம் உன்னை மறந்திடாது
உரத்துச் சொல்வேனே!
உண்மைத் தலைவன் நீதானென

உறுதி கொண்டோமே!