Tuesday, June 4, 2019

காதல் வரமா? - காதலர் தின சிறப்புக் கவிதை

-முனைவர் நா.இளங்கோ




வாழ்க்கைப் பாதையின்
மேடு பள்ளங்களில்
சலியாத பயணம்…
இலக்கற்றுத் தொடங்கும்
ஒவ்வொரு பயணமும்
வெற்றியில் முடியும்

வாழ்க்கைப் பயணத்தில்
அலுப்புறும் போதெல்லாம்
சக பயணிகளோடு
நேசக்கரம் நீளுமந்த
ஒவ்வொரு கணத்திலும்
காதல் மலரும்

நீளும் கரங்களை
நிராகரிப்பதும் நேசிப்பதும்
அவரவர் விருப்பம்
ஒருகை விலக்கினால்
ஒருகை உறவுறும்

உள்ளம் உருக
உன் கரங்களைப் பற்றும்
அந்தக் கைகளைத்
தேடும்பயணத்தில்
உதாசீனப் படுத்தியக்
கரங்களை மறந்துவிடு

அழுந்தப் பற்றும்
அன்புப் பிடியில்
என்பு உருகும்
ஏக்கம் தொலையும்

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை
உயிர்ப்பின் அடையாளம்

மகரந்தச் சேர்க்கைகள்
இல்லாமல்
காய் ஏது? கனி ஏது?

உயிர்ப்பின் உன்னதம்
காதலின் இலட்சியம்

உள்ளத்தில் தொடங்கி
உடம்பில் முடிவதும்
உடம்பில் தொடங்கி
உள்ளத்தில் முடிவதும்
இரண்டும் காதல்தான்

மனுதர்மம் பேசி
சாதிப் பதாகைகள் ஏந்தி
சில கழுகுகள்
வானில்
வட்டமிடத் தொடங்கிவிட்டன

செத்த எலிதொடங்கி
நரமாமிசம் வரைக்
குத்திக் கிழிக்கும்
கொலைகாரக் கழுகுகளுக்கு
குழந்தைகளைக்
கொஞ்சத் தெரியுமா?

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை

உயிர்ப்பின் அடையாளம்

-மலையருவி-