Saturday, June 8, 2013

நாடக ஒத்திகை நேரம்

-மலையருவி


ஒத்திகை நடக்கும் அறையில்
எல்லோர் கைகளிலும்
அவர் அவர்களுக்கான
வசனப் பக்கங்கள்

விருப்பம்போல்,
சிலர் வெற்றுப் பார்வையில்
சிலர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியபடி
மெல்ல வாசித்து,
உரக்கப் படித்து
பேசி,
நடித்து
ஒவ்வொருவரும் வேறுபட்டு
வசனப் பக்கங்களோடு

நடிக்க அழைக்கப்பட்டிருந்தேன்!
எனக்கான
வசனப் பக்கங்களுக்கு
யாரைக் கேட்பது?

நாடக ஆசிரியரோ
இயக்குநரோ
வரக்கூடும்..
காத்திருக்கிறேன்

நேரம் கடந்துகொண்டே இருக்க,
கைக் கடிகாரம் பார்த்து
காலண்டர் பார்த்து
மாறிவரும்
பருவ காலங்களைப் பார்த்துக்
காலம் கடப்பதை உணர்கிறேன்

எனக்கான
வசனப் பக்கங்கள் இல்லாமல்
நான் என்ன செய்வது?

சலித்துப் போய்
உரத்துக் குரல் கொடுத்தேன்,
எனக்கான வசனப் பக்கங்கள்; எங்கே?

நீ கொண்டு வரவில்லையா!
அதிர்ந்தனர் அனைவரும்.

எங்கள் கையில்
நாங்கள் கொண்டு வந்தது.
உனக்கான வசனத்தை
வேறு யார் தரமுடியும்!

கவிழ்ந்த தலை நிமிர்த்தி
ஏமாற்றத்தை மறைத்து,
நாடக இயக்குநர் வரட்டும்
என்றேன் அமைதியாக.

மறுமொழி தந்தனர்
கூட்டாக!
நாங்களும் அவருக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நம்பிக்கையோடு!

காலம் காலமாக!