Thursday, January 31, 2013

கவிதை ஜெயித்துவிடும்


-மலையருவி


துண்டறிக்கையின்
பின்புற வெற்றிடத்தில்
எழுதப்பட்ட கவிதை?
வாசிக்கக் காத்திருந்தார் கவிஞர்

பார்வையாளர்களில் பலரும்
ஆளுக்கொரு தாள்ஏந்தி..

வாசித்து முடித்தவர்களுக்கு..
வேறு அவசர வேலை!
மெல்ல நழுவல்

நேரம் கடக்கக்.. கடக்க..
அரங்கு
காலி இருக்கைகளால்
நிரம்பி வழிந்தது

மைக்கைப் பிடித்தவர்களோ
சொல்லுக்குச் சொல்
வரிக்கு வரி
இருமுறைக்கு மும்முறையாய்
பதவுரை, பொழிப்புரை,
விளக்கவுரையாய்
விளங்கி..
விளக்கி..
உரத்த முழக்கம்

காத்திருந்த கவிஞரோ!
நிலவரத்தின் கலவரத்தால்
கவலையை முகத்தில் தேக்கி

எப்போதும் கைகொட்டி ரசிக்கும்
சுவைஞர் ஒருவர்,
இன்னும்ம்ம்.. அரங்கிலிருக்க!
நிம்மதிப் பெருமூச்சு

ரசிக்கத் தெரிந்தவர்
ஒருவர் போதும்
கவிதை ஜெயித்துவிடும்.

பாவம்,
கவிஞரின் நம்பிக்கை!