Tuesday, January 1, 2013

கான்கிரீட் மரம்


-மலையருவி



ஊரெங்கும்
கான்கரீட் தோப்புகள், காடுகள்
கண்ணில் நிறைந்து
கனவில்; ததும்பும்

வான்முட்ட வளர்ந்ததும்
வனப்புடன் விரிந்ததும்
புதரெனச் செறிந்ததும்
குறுமரமாய்க் குவிந்ததும்..
வகைவகையாய்
வனப்புமிகு மரங்கள்,
இரவில் மலரும்
வண்ணமிகு
மின்னொளிப் பூக்களில் மிளிரும்

நாடெங்கும் கான்கிரீட் மரங்கள்
எனக்கான மரம் எங்கே!

அப்பன் பாட்டன்
ஆசையுடன்
நாளைக்காக நட்டுவைத்த
நல்ல மரங்களின் நலன்சுருட்டும்
யோகமும்
எனக்கு வாய்க்கவில்லை.

கையில் மரக்கன்றும்
காலடியில் குழியுமாய்
கண்ணை விண்ணில்வைத்து
கடன் நோக்கிக்
கழித்துவிட்டேன்

குவளையில் கொண்டுவந்த
சேமிப்பும்
மண்உறிஞ்ச
ஒற்றை மரக்கன்றும்
வாடிக் காய்ந்ததுவே

வெட்டிய குழியருகே
வெறுமனே நான் குந்தி
வேடிக்கைப் பார்த்திருக்க
பக்கத்துக் குழியிலெ;லாம்
வான்முட்டும் வரை உயர்ந்து
வளர்ந்தனவே பயன்மரங்கள்

கான்கிரீட் மரம் வளர்க்கும்
பகல்கனவில் நான் திகைக்க
வெட்டிய குழி புதைந்து
விதையாகும் என் நிராசைகள்.