Thursday, December 31, 2009

இவ்விடம் யாவரும் நலம்!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

அன்பு மகன் சிரஞ்சீவிக்கு,

இவ்விடம் யாவரும் நலம்!

நீ அனுப்பிய பணம் கிடைத்தது.

அம்மாவுக்கு
ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிட்டது
தூக்கமில்லை
மூச்சுவிட அதிக சிரமப்படுகிறார்
இருந்தாலும்
வீட்டுவேலைகளெல்லாம் அவள் தலையில்தான்
என்ன செய்ய!

உன்மனைவி
உன் மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம்
அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்!

எனக்கு
வழக்கம் போல்தான்!
இப்போ கொஞ்சம் கொஞ்சம்
தட்டுத் தடுமாறி நடக்க முயற்சிக்கிறேன்!
சக்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்
பி.பி.தான் அப்பப்போ ஏறிவிடுகிறது
கால்காயம் ஆறிவருகிறது

நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள்

இவ்விடம் யாவரும் நலம்!!

தைரியத்துடன் அப்பா

வைத்தியநாதன்