Wednesday, December 30, 2009

செம்மொழியும் இரத்தவாடையும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

என் அறை முழுவதும் செம்மொழி?

செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..

என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..

படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..

மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது

பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்

சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்

இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!

இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!

மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை

பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!

என் அறை முழுவதும்.. .. ..