Sunday, November 29, 2009

அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பிரசவ அறைக்கு
உள்ளே
மகவு ஈனும்
தாயின்
வேதனை முனகல்

வெளியே
கணவன்,
உற்றார் உறவினர்
நட்பு வட்டம்

வெடிக்கும் வேதனையின்
கதறலைத் தொடர்ந்தது,
குழந்தையின்
மெல்லிய அழுகையொலி.

தேனாய் இனித்தது.

காத்திருந்தோருக்குக்
கற்கண்டாய்ச்
சேதி!
தாயும் சேயும் நலம்!

குழந்தைக்குப் பெயர்?
சூட்டி மகிழ
தாய், தந்தை
தாத்தா, பாட்டி
உறவு, நட்பு
ஆயிரமிருந்தும்

ஓடு! ஜோசியக்காரனிடம்,

என்ன பெயர் வைக்க?
நட்சத்திரப்படி,
ரி, ரீ, லு, லூ
எனத்தொடங்கும் பெயர்வை!
இதுவோ? இது போன்றோ?

எழுத்து இத்தனைதான்!
கூட்டினால்
எழுத்தெண்ணிக்கை
இத்தனை? வரவேண்டும்.

தமிழில் பெயர்!
ஆகவே ஆகாது

அடச்சீ!
இதுக்கா பெத்தீங்க?

கருவறைகளும் காமக் களியாட்டங்களும்

மலையருவி

காமத்தை விட்டொழிக்க
பக்தர்கள் ஆனதெல்லாம்
பழைய கதை

பக்தி மீதூற
கடவுளைக் காமுற்று
கவிதைகள் பாடியதும்
கடந்த காலம்

காம வெறியேற
கடவுள் துணையோடு
பக்தைகளை மேய்வதுவே
புதிய கதையாச்சு

கருவறைகள்
கடவுள் இருப்பிடமாம்

எட்டிப் பார்த்து
கும்பிட்டு
தட்சணை கொடுக்க மட்டும்
பக்தர்கள்

பக்தைகளுக்கு
ஆண்டவன் ஆசியோடு
குருக்கள் குதூகலிக்க
அனுமதி!

புனிதம்! புனிதம்!!

காஞ்சிபுரத்து
தேவநாதன்கள்
கருவறைகள் தோறும்!

எங்கே கடவுள்?

Wednesday, October 28, 2009

சசிகலாவிலும் மு.க.அழகிரியிலும் முனைவர் பட்டமா?

முனைவர் நா.இளங்கோ

இனி வரப்போகும் ஒருநாளில்,

நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது.

வல்லுநர் குழு
வட்டமாய் அமர்ந்து
முந்திரி கொறித்து
வேலைக்களத்தில்
வென்ற நபரை
அறிவிக்க முனைந்தது

மாநிலத்தில்
நெருக்கடி,
மத்தியில் ஆளும்
தேசியக் கட்சியோடு
ஒத்துப்போகாத
மாநிலஆட்சி கலைக்கப்பட்டு
குடியரசுத் தலைவர் ஆட்சி!

சிக்கலே அதனால்தான்!

இருப்பது ஒருபதவி
யாருக்குக் கொடுப்பது?

ஜெயலலிதா சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
சசிகலாவில்
முனைவர் பட்டம் முடித்தவர்க்கா?

கலைஞர் சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
மு.க.அழகிரியில்
முனைவர் பட்டம் பெற்றவர்க்கா?

வல்லுநர் குழுவில்,
அத்வானியில்
முதுமுனைவர் முடித்தவர்க்கும்
சோனியா
இருக்கைத் தலைவருக்கும்
ஓத்த கருத்து இல்லாததால்
நேர்முகத் தேர்வு ரத்து.!

Saturday, October 17, 2009

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

மலையருவி

மரணம் கொண்டாடத்தக்கதா?

யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது

தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு

தீர்மானிப்பது யார்?

அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்

ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்

களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை

வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு

மரணங்கள் கொண்டாடப்படுகின்றன

ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.

Thursday, October 15, 2009

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

மலையருவி

நாடகம் பார்க்கலாம்
வாருங்கள்!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்!

இயக்குநர் தந்த
வசனப் புத்தகத்தின்
ஆறுதல் வசனங்கள்
பிழையின்றி
ஒப்புவிக்கப்படுகின்றன

அரிதாரம் பூசாத
நடிகர்கள் எல்லாம்
பாத்திரம் அறிந்து,

மிகையுமில்லாமல்
குறையுமில்லாமல்
கனகச்சிதமாய்
நடிப்பில்
வெளுத்துக் கட்டுகிறார்கள்

வேடிக்கை பார்க்கும்
வெட்கம் கெட்டதுகளோ?
எப்போதும் போலவே
விநோதமாய் ரசிக்குது!

முள்கம்பி வேலிகளுக்குள்
வதை முகாம்களில்
சிக்கி,
ஓர் உலகம்
விழிபிதுங்கி,
சேறும் இரத்தமுமாய்
சின்னா பின்னப்பட்டுக் கிடக்கயில்
நாடகம் நடக்குது நலமாக!!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்

Saturday, October 3, 2009

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மலையருவி

ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!

போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை

மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்

இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!

நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!

உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!

மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!

Wednesday, September 9, 2009

ஏது தொடக்கம்! ஏது முடிவு! - மலையருவி

ஏது தொடக்கம்! ஏது முடிவு!

எங்கே தொடங்குவது?
எங்கே முடிப்பது?

தொடக்கப் புள்ளி தெரியாமல்
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்

எங்கோ ஒரு இடத்தில்
எப்பொழுதோ ஒரு பொழுதில்
தொடங்கியிருக்க வேண்டுமே!
அந்தப் புள்ளி இல்லாமல் எப்படி?

முழுமைபெற்று
முடிந்து போகும்
அந்த முற்றுப் புள்ளி எங்கே?
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்

ஏதோ ஒரு புள்ளியில்
என்றோ ஒரு பொழுதில்
முடிந்திருக்க வேண்டுமே!
அந்த முற்றுப்புள்ளி இல்லாமல் எப்படி?

***
எல்லாமே ஒரு வட்டம்
அதில்
மேலது கீழாய் கீழது மேலாய்
தொடக்கமே முடிவாய்
முடிவே தொடக்கமாய்
தொடக்கமுமின்றி
முடிவுமின்றி
இடைவெளி இன்றி

சுற்றி! சுற்றி!
சுற்றி! சுற்றி!
சுழற்சி!

ஏது தொடக்கம்! ஏது முடிவு!