Wednesday, December 30, 2009

செம்மொழியும் இரத்தவாடையும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

என் அறை முழுவதும் செம்மொழி?

செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..

என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..

படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..

மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது

பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்

சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்

இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!

இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!

மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை

பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!

என் அறை முழுவதும்.. .. ..

Sunday, November 29, 2009

அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பிரசவ அறைக்கு
உள்ளே
மகவு ஈனும்
தாயின்
வேதனை முனகல்

வெளியே
கணவன்,
உற்றார் உறவினர்
நட்பு வட்டம்

வெடிக்கும் வேதனையின்
கதறலைத் தொடர்ந்தது,
குழந்தையின்
மெல்லிய அழுகையொலி.

தேனாய் இனித்தது.

காத்திருந்தோருக்குக்
கற்கண்டாய்ச்
சேதி!
தாயும் சேயும் நலம்!

குழந்தைக்குப் பெயர்?
சூட்டி மகிழ
தாய், தந்தை
தாத்தா, பாட்டி
உறவு, நட்பு
ஆயிரமிருந்தும்

ஓடு! ஜோசியக்காரனிடம்,

என்ன பெயர் வைக்க?
நட்சத்திரப்படி,
ரி, ரீ, லு, லூ
எனத்தொடங்கும் பெயர்வை!
இதுவோ? இது போன்றோ?

எழுத்து இத்தனைதான்!
கூட்டினால்
எழுத்தெண்ணிக்கை
இத்தனை? வரவேண்டும்.

தமிழில் பெயர்!
ஆகவே ஆகாது

அடச்சீ!
இதுக்கா பெத்தீங்க?

கருவறைகளும் காமக் களியாட்டங்களும்

மலையருவி

காமத்தை விட்டொழிக்க
பக்தர்கள் ஆனதெல்லாம்
பழைய கதை

பக்தி மீதூற
கடவுளைக் காமுற்று
கவிதைகள் பாடியதும்
கடந்த காலம்

காம வெறியேற
கடவுள் துணையோடு
பக்தைகளை மேய்வதுவே
புதிய கதையாச்சு

கருவறைகள்
கடவுள் இருப்பிடமாம்

எட்டிப் பார்த்து
கும்பிட்டு
தட்சணை கொடுக்க மட்டும்
பக்தர்கள்

பக்தைகளுக்கு
ஆண்டவன் ஆசியோடு
குருக்கள் குதூகலிக்க
அனுமதி!

புனிதம்! புனிதம்!!

காஞ்சிபுரத்து
தேவநாதன்கள்
கருவறைகள் தோறும்!

எங்கே கடவுள்?

Wednesday, October 28, 2009

சசிகலாவிலும் மு.க.அழகிரியிலும் முனைவர் பட்டமா?

முனைவர் நா.இளங்கோ

இனி வரப்போகும் ஒருநாளில்,

நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது.

வல்லுநர் குழு
வட்டமாய் அமர்ந்து
முந்திரி கொறித்து
வேலைக்களத்தில்
வென்ற நபரை
அறிவிக்க முனைந்தது

மாநிலத்தில்
நெருக்கடி,
மத்தியில் ஆளும்
தேசியக் கட்சியோடு
ஒத்துப்போகாத
மாநிலஆட்சி கலைக்கப்பட்டு
குடியரசுத் தலைவர் ஆட்சி!

சிக்கலே அதனால்தான்!

இருப்பது ஒருபதவி
யாருக்குக் கொடுப்பது?

ஜெயலலிதா சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
சசிகலாவில்
முனைவர் பட்டம் முடித்தவர்க்கா?

கலைஞர் சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
மு.க.அழகிரியில்
முனைவர் பட்டம் பெற்றவர்க்கா?

வல்லுநர் குழுவில்,
அத்வானியில்
முதுமுனைவர் முடித்தவர்க்கும்
சோனியா
இருக்கைத் தலைவருக்கும்
ஓத்த கருத்து இல்லாததால்
நேர்முகத் தேர்வு ரத்து.!

Saturday, October 17, 2009

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

மலையருவி

மரணம் கொண்டாடத்தக்கதா?

யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது

தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு

தீர்மானிப்பது யார்?

அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்

ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்

களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை

வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு

மரணங்கள் கொண்டாடப்படுகின்றன

ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.

Thursday, October 15, 2009

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

மலையருவி

நாடகம் பார்க்கலாம்
வாருங்கள்!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்!

இயக்குநர் தந்த
வசனப் புத்தகத்தின்
ஆறுதல் வசனங்கள்
பிழையின்றி
ஒப்புவிக்கப்படுகின்றன

அரிதாரம் பூசாத
நடிகர்கள் எல்லாம்
பாத்திரம் அறிந்து,

மிகையுமில்லாமல்
குறையுமில்லாமல்
கனகச்சிதமாய்
நடிப்பில்
வெளுத்துக் கட்டுகிறார்கள்

வேடிக்கை பார்க்கும்
வெட்கம் கெட்டதுகளோ?
எப்போதும் போலவே
விநோதமாய் ரசிக்குது!

முள்கம்பி வேலிகளுக்குள்
வதை முகாம்களில்
சிக்கி,
ஓர் உலகம்
விழிபிதுங்கி,
சேறும் இரத்தமுமாய்
சின்னா பின்னப்பட்டுக் கிடக்கயில்
நாடகம் நடக்குது நலமாக!!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்

Saturday, October 3, 2009

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மலையருவி

ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!

போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை

மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்

இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!

நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!

உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!

மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!