Thursday, January 30, 2014

அடையாளக் குறி எங்கே?


மலையருவி - முனைவர் நா.இளங்கோ


அடையாளமில்லாமல்
எப்பொழுதும்
நான்
அறியப்படுவதில்லை

ஊர், நகரம் தொடங்கி
எல்லைகள் தாண்டத் தாண்ட
மாறுகின்றன
என் அடையாளங்கள்.

சாதி, வர்க்கம், மதம்,
மொழி, இனம், தேசம் என
அடையாளங்கள் குறியிடப்படும்
மாறும் அடையாளங்களே
நான் என்றால்
மாற்றங்கள்தான்
எனது
முதல் அடையாளம்.

அடையாளக் குறிகளால்
பலநேரம்
ஆபத்துகள் விளைந்தாலும்
சில அனுகூலங்களுக்காக
அவற்றைத்
துறந்துவிட மனமில்லை

ஒரே சமயத்தில்
இரண்டு மூன்று அடையாளங்கள்
கையிருப்பில்,
தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப்
பொருத்திக் கொள்ள வசதியாக.

அடையாளங்கள்
அதிகாரத்தோடு தோழமை கொள்ள
அதிகாரங்களோ
அடையாளத்தை அழிக்க முயலும்.

தனித்து
இருட்டறையில்
எல்லா
அடையாளக் குறிகளும் துறந்து
என்னை நானே
எதிரிட்டுப் பார்க்கையில்
நான் என்பதே இல்லை அங்கே.

- முனைவர் நா.இளங்கோ