Tuesday, June 11, 2013

ஓர் ஒற்றைக்குரல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


ஆணிவேரென வான் வீழ்த்தும்
மின்னலில்,
திக்குகள் அதிரும்
இடியோசையில்,
கொட்டித் தீர்க்கும்
பெருமழையில்,
சுழன்றடிக்கும்
சூறாவளிக் காற்றில்,
ஒரு கை தாங்கி
ஒரு கை காக்கும்
அகல் விளக்கின்
சுடர் போற்றும்
ஓர் ஒற்றைக்குரல்
ஓங்கி ஒலித்தது

மதப்பூசல்களின்
சூறாவளிப் பெருமழையில்
ஜீவகாருண்யச் சுடர் ஏந்தி
உயிர்க்குலச் சமத்துவம் வேண்டி
தனிப்பெருங் கருணையோடு
ஒலித்தது அந்தக் குரல்

வேத புராண இதிகாசச்
சேற்றில் குளித்து
நாறிக்கிடந்த
உயிர்க்குலத்தை
அருள்மழை பொழிந்து
தூய்மை செய்த
வள்ளலின் குரல் அது.

மூடர்கள் துப்பியது துய்த்து
முழுவயிறு நிரப்பும்
காக்கைகளின் பெருங்கூச்சலில்
தனிக்குரல் கேட்கத்
தவறின செவிகள்

தனிக்குரல் கேட்கத்
தழைக்கும் உயிர்க்குலம்.