Wednesday, April 10, 2013

வீர தீர அதிசூர பராக்கிரம

-மலையருவி




வீர தீர அதிசூர
பராக்கிரமத்
தலைவருக்குப் பிறந்தநாள்

இந்த ரகசியம்
அகில உலகத்திற்கும்
இன்றுதான் தெரிந்தது.

வாலிபத்தைக் கடந்த
வயதென்றாலும்
இந்தநாள்வரைப்
பிரபஞ்சத்தின்
எந்த மூலையில்
செங்கோல் ஓச்சிக் கொண்டிருந்தார்
என்பது பிரம்ம ரகசியம்

வாழ்த்து சொல்லும்
பேனர்களில்
வெட்டப்பட்டுத்
தொங்கும் தலைகள்
கணக்கற்றவை

வரலாறே, வருங்காலமே,
உயிரே, இதயமே,
விடிவெள்ளியே, இயக்கமே என்ற
விளிகளே அவரின்
விலாசங்களாகும்

வீதியெங்கும்
தோரணங்கள், பதாகைகள்,
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள்
பிரியாணிப் பொட்டலங்கள்
வாழ்க! வெல்க கோஷங்கள்

மாமன்னர்களின்
பட்டாபிஷேகங்களை வெல்லும்
பகட்டும் படாடோபங்களும்
வராது வந்த மாமணிக்கு
அல்லக்கைகளின் அமர்க்களங்கள்

இலட்சங்களில் கோடிகளில்
நடக்கும் கொண்டாடட்டங்கள்
நாளைய அறுவடைக்கு
அச்சாரங்கள்!
களத்துமேட்டில்
சிதறியது பொறுக்கும் கனவில்
துதிக் கூட்டங்கள்

-மலையருவி