Sunday, March 8, 2020

கங்குகள் உயிர்க்கும்

மலையருவி


கல்லெறி, தீ வைப்பு
வன்முறை வெறியாட்டம்.
கையில் தடி
கண்களில் கொலைவெறி
மறைத்த முகங்களின்
முகவரி தொலையும்

ஆயுதம் எடுத்தவர்க்கும்
ஆயுதம் கொடுத்தவர்க்கும்
அதே ஆயுதம்தான்.

இரத்தப் பூஜையும்
பிணப் படையலும்
சாமிக்காகவா!

எதிர்க்குரல் கேட்கக்
கூசும் செவிகளை
முழக்கப் பேரொலி
ஈட்டியாய்ப் பிளக்கும்

எரியும் தீயடங்கி
பூக்கும் சாம்பலில்
கங்குகள் உயிர்க்கும்

-மலையருவி


கடைசி நம்பிக்கை

மலையருவி


அவன், உன்னை வெட்டினாலும்
நீ, அவனை வெட்டினாலும்
அவர்கள் 
தமக்குள்ளே வெட்டி மடிந்தாலும்
நீங்கள்
உங்களுக்குள்ளே வெட்டி வீழ்ந்தாலும்

நமக்காக
அழுது அரற்றிக்
கண்ணீர் சிந்திக்
காக்கத் துடிப்பன
மனித மனங்களே!

மனிதர்களே!
ஒருபோதும்
மனிதத்தை வெட்டி
வீழ்த்தி விடாதீர்கள்!

நமது
கடைசி நம்பிக்கை
மனிதம்தான்.

-மலையருவி



Sunday, December 8, 2019

ஆதிக்கச் சுவரை இடி

முனைவர் நா.இளங்கோ



இடி
ஆதிக்கச் சுவரை இடி
அடித்தளம் அற்றுப் போக
உடைத்து இடி..

உடை,
மனுநீதியின்
ஒவ்வொரு கல்லையும்
உடை..

உடைத்து நொறுக்கு
சனாதன தர்மம்
தூள் தூளாகும் வரை
உடைத்து நொறுக்கு

அழி
அடையாளம்
அற்றுப் போகும்வரை அழி
முற்றாக அழி
சாதிபேத அநீதிகளை அழி

விழி
சமத்துவ உலகம் காண விழி.


-மலையருவி

இரத்தச் சிவப்பில் தாமரை

முனைவர் நா.இளங்கோ


குருதிச் சேற்றில்
குதித்துக் குளித்து
சேறுவழித்து...
கண்கள் சிவக்க
வீறுநடை,

கையில்
இரத்தச் சிவப்பில்
சொட்டும் ஈரத்தோடு
தாமரைப் பூக்கள்.


-மலையருவி.

முப்புரி நூல்

முனைவர் நா.இளங்கோ



கல்விக்கு
நூலோடு தொடர்புண்டு,
அது முப்புரி நூல்
என்கிறது மனு()தர்மம்.

பாத்திமா லத்தீப்பின்
தூக்குக் கயிற்றில்
எத்தனை எத்தனை
முப்புரி நூல்களோ?

காலம் காலமாய்த் திரிக்கப்பட்டு
இறுகி கனத்து
இன்னும்
எத்தனை உயிர் வாங்கக்
காத்திருக்கின்றனவோ!

நூல்.. நூல்.. நூல்..

- மலையருவி.

நறுக்குகள் -2

முனைவர் நா.இளங்கோ



கண்ணாடியில் காணும்
தன் பிம்பத்தை
இடைவிடாது
கொத்தித் துரத்தும்
குருவிகளாய் நாம்.


- மலையருவி.









கம்பளிப் புழுவின்
கடுந்தவம் வெற்றி!
வண்ணத்துப் பூச்சி.

-மலையருவி










நீளும் ஒற்றையடிப் பாதையில்
எதிர்ப்படுவோர் எல்லாம்
நானாக இருக்கையில்
யாரை நோக்கி நீளும்
என் சுட்டுவிரல்!

- மலையருவி.











கழுதைகளோடு என்ன சகவாசம்
குதிரைகளுக்கு?
எனப் புலம்பித் தவித்து
உற்றுப் பார்த்ததில்
எல்லாமே கழுதைகள்தாம்!

-மலையருவி

நறுக்குகள் -1

முனைவர் நா.இளங்கோ





சுமக்கையில்
சுமை தெரிவதில்லை
சுமக்கும் சுகத்தில்

-மலையருவி
















பதுக்கவில்லை
சேமிக்கின்றன
எறும்புகள்.

- மலையருவி










வழவழப்பிலும் மினுமினுப்பிலும்

தெரிகின்றன
கூழாங்கற்களின்
வலிகளும் இரணங்களும்.

- மலையருவி.











மிருதுவான மேனியைத்
தடவி வருடும்
கைகளுக்குத் தெரியாது,
பூனைகளிள்
கொடூரப் பற்களும்
கூரிய நகங்களும்.

- மலையருவி.