Tuesday, November 12, 2013

குரு இல்லாமல் பிரபஞ்ச இயக்கம் எப்படி!


மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)

நீண்ட நாட்களாய் 
ஒரே குருவுக்குச்
சீடனாயிருப்பது..
தொடரும்
ஆன்மீகத் தேடலுக்கு
சலிப்பைத் தந்தது.
எப்பொழுதும்
சீரான கால இடைவெளிகளில்
புத்தம் புதிய சாமியார்கள் 
எனக்குக் குருவாவதுண்டு.
பழையவர்கள்
பெரும்பாலும் 
வழக்கு, ஜாமீன், சிறை என்று
பரபரப்பாகி விடுவதால்
தொடர்ந்து.. 
குருவாயிருக்க சாத்தியமில்லை
தொடரும் வழக்கத்தில் 
புதிய தேக்கநிலை
புதிய குரு வேண்டும்
அண்மையில் பிரபலமான,
தாடியுடனோ இல்லாமலோ,
தேஜஸ்மிக்க,
வார்த்தைகளில் வசீகரிக்கக் கூடிய,
அயல்நாட்டு பக்தர்கள் மண்டிய,
பல கோடிகளில் ஆசிரமம் நடத்தும்
நானே பிரம்மம் 
எனச் சவால்விடும்
புதிய சாமியார் வேண்டும்
பழைய குருவைக் 
கழட்டிவிடும் தருணமிது
பழசோ புதுசோ
குரு இல்லாமல்
பிரபஞ்ச இயக்கம் எப்படி!
உள்முக வெளிமுகத் தேடல் எப்படி!

புதிய குரு
புதிய தீட்சை
புதிய தேடல்
புதிய நான்..