Sunday, January 16, 2011

சாமியேய்ய் மரணம் ஐயப்பா !!

- மலையருவி


சாமியேய்ய் மரணம் ஐயப்பா!

சரண கோஷங்களோடு
மரண கோஷங்களும்
வானைப் பிளந்தனவே!

ஐயப்பா!
கலியுகக் கடவுளாமே! நீ
இப்படிக் காலனாய் ஆனதென்ன!

இருமுடி சுமந்த உன் மக்கள்
ஒருமுடியும் இழந்ததென்ன!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
எனக் காத தூரங்களைக்
கடந்த கால்கள்

பிதுங்கி வழிந்த மனிதநெரிசலில்
அச்சத்தின் உச்சத்தில்
சக பக்தர்களையே
மிதித்துத் துவைத்த
கொடுமை!
என்ன? உன் திருவுளமா!

புல்மேடு தரிசனம்
புதைமேட்டுக்கு அழைத்ததென்ன!
மகரஜோதி
இப்படி
மரணத்தின் நுழைவாயில்
ஆனதேன்!

மணிகண்டா!
உன் சன்னதி மணியோசை
சாவுமணி ஆனதெப்படி!

சாஸ்தாவே!
எங்கள் வாய்க்கரிசி
வாய்த்த வழக்கென்ன
வகையறியோமே!

அரிஹர சுதனே!
உன்னைத் தேடிவந்த
சாமிகளைக் சவக்குழிக்கு
அனுப்பிவிட்டு
இனி
யாரைக் காத்து இரட்சிக்கத் திட்டம்!

சாமியேய்ய் மரணம் ஐயப்பா...!!